
இமயமலைப் பகுதியில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மகாமேரு என்ற செடி பூத்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
கோழியின் தலை போன்ற தோற்றம் கொண்ட மலர் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இயற்கையின் வினோதம். 400 வருடங்களுக்கு ஒரு முறை இமாலய மலையில் மலரும் , “மகாமேரு” அல்லது “ஆர்யா” பூ. இப்பொழுது மலர்ந்திருக்கிறது. நம் தலைமுறை அதிர்ஷ்டம் செய்திருக்கிறது… அடுத்து நானூறு வருடங்கள் கழித்தல்லவா மீண்டும் மலரும். நிறமும் அமைப்பும் எத்தனை அழகு..!!!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை சமுத்திரக்கனி என்ற ஃபேஸ்புக் ஐடி நபர் 2019 அக்டோபர் 22ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அபூர்வமாக பூக்கும் செடி என்றால் குறிஞ்சியை சொல்வோம். அது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும். இது பூக்க 400 வருடங்கள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் படத்தைப் பார்க்க மார்ஃபிங் செய்யப்பட்டது போல உள்ளது. அது கூட இரண்டாம் பட்சம்தான்… 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ என்பது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
உண்மை அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த பூவின் படத்தைப் பலரும் பதிவிட்டு ஷேர் செய்து வருவது தெரிந்தது.

Search Link 1 | Search Link 2 |
மகாமேரு என்று ஏதாவது செடி உள்ளதா என்று தேடினோம். அப்போது ஜோதிடம், ஜாதகத்தில் சொல்லப்படும் ஶ்ரீ எந்திரத்தின் மற்றொரு பெயர் மகாமேரு என்று தெரிந்தது. மேலும், 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மகா மேரு என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருவதாக வெளியாக செய்தி ஒன்று கிடைத்தது. ஆனால் அதில் வேறு ஒரு மலரின் படம் ஷேர் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது.
hoaxorfact.com | Archived Link |
தொடர்ந்து இமயமலைப் பகுதியில் காணப்படும் மகாமேரு என்று கூகுளில் டைப் செய்து தேடியபோது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த மலரின் அசல் படம் நமக்கு கிடைத்தது. அதில், பறவையின் கண் போன்ற தோற்றம் அதற்கு இல்லை. அந்த பூ 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக் கூடியது என்ற தகவல் தவறானது என்றும் தெரிந்தது.

இணையதளத்தில் இந்த பூ விதை, செடி விற்பனைக்கு உள்ளதாக பல இணையதள தகவல் மற்றும் பதிவுகள் நமக்கு கிடைத்தன. அதில் இந்த தாவரத்தின் தாவரவியல் பெயர் சால்வியா மைக்ரோபீலியா ஹாட் லிப்ஸ் (Salvia microphylla Hot Lips) என்று குறிப்பிட்டு இருந்தனர். இது மிக விரைவாக வளரக்கூடிய தாவரம். ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் தொடங்கி பனிக்காலம் வரை பூக்கக் கூடியது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

highcountrygardens.com | Archived Link |
தாவரவியல் பெயரை அடிப்படையாகக் கொண்டு கூகுளில் தேடினோம். அதில் இந்த தாவரம் முளைக்க ஆரம்பித்த முதல் ஆண்டிலேயே பூக்க ஆரம்பித்துவிடும். இரண்டாவது ஆண்டில் முழு வளர்ச்சியடைந்துவிடும். கோடையின் நடுப்பகுதியில் பூக்க ஆரம்பிக்கும். அப்போது சிவப்பு நிறத்தில் பூக்கும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கும், சூரிய உதயம் மற்றும் மறைவு நேரம் குறையும்போது முழுவதும் வெள்ளை நிறத்தில் பூக்கும் என்று குறிப்பிட்டிந்தனர்.

rhs.org.uk | Archived Link 1 |
listverse.com | Archived Link 2 |
மிகவும் அரியவகை மலர்களில் இதுவும் ஒன்றா என்று தேடிப்பார்த்தோம். மிக அரிதாக பூக்கும் தாவரங்கள் பட்டியலில் குறிஞ்சி உள்ளிட்ட மலர்கள் இடம்பெற்று இருந்தன. ஆனா, இந்த மலர் இல்லை என்பது தெரிந்தது.
நம்முடைய ஆய்வில்,
400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் என்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் படத்தில் உள்ள மலரின் பெயர் மகாமேரு இல்லை. மகாமேரு என்ற பெயரில் மலர் ஏதும் இல்லை. ஶ்ரீசக்கரத்தின் மற்றொரு பெயர் மகாமேரு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
படத்தில் உள்ள மலரின் பெயர் சால்வியா மைக்ரோபீலியா ஹாட் லிப்ஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை முதல் பனிக்காலம் வரை இது பூக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் எடிட் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மகா மேருவின் படம் என்று ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:400 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் மகாமேரு; காதில் பூ சுற்றும் ஃபேஸ்புக் பதிவு!
Fact Check By: Chendur PandianResult: False
