
‘’தமிழ்நாடு பாஜகவில் நாய்கள் பிரிவுக்கு புதிய துணைத் தலைவர் நியமனம்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
Facebook Claim Link 4 | Archived Link 4 |
இதன்படி, பாஜக நிர்வாகிகள் நாயுடன் நிற்பது போன்ற புகைப்படத்தை வைத்து, அதன் கீழே, புதிய தலைமுறை பெயரில் வெளியான நியூஸ் கார்டை இணைத்து தகவல் பகிர்ந்துள்ளனர்.
இதனை பார்க்கையில், உண்மையிலேயே, தமிழக பாஜகவில் நாய்களுக்கு தனிப்பிரிவு தொடங்கியுள்ளதைப் போன்று இருப்பதால், பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில், இந்திய மக்கள் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை போன்ற நாட்டு நாய்களை வளர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.
இதன்பேரில், தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், நாட்டு ரக நாய்களை வாங்குவதும், அவற்றோடு புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இதன் ஒருபகுதியாக, மோடி பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக வழக்கறிஞர் அணி சார்பாக, அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகனுக்கு, சிப்பிப்பாறை நாய் ஒன்றை பரிசாக அளித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்தே, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மேற்கண்டபடி தகவல் பரப்பி வருகின்றனர்.

இதேபோல, பரிசாக வழங்கப்பட்ட நாய்க்கு, கட்சியில் பதவி அளித்ததாகக் கூறப்படுவதும் தவறான தகவல். உண்மையில், புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு வேறு ஒன்றாகும். அதனை எடிட் செய்து, இந்த தகவலை பகிர்ந்துள்ளனர்.
இதுபற்றி கூடுதல் ஆதாரத்திற்காக, புதிய தலைமுறை ஆன்லைன் பிரிவு நிர்வாகியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். இதற்குப் பதில் அளித்த அவர், ‘’எங்களது பெயரில் போலியான செய்தி தயாரித்து பகிர்ந்துள்ளனர். இதன் உண்மையான நியூஸ் கார்டை 17.09.2020 அன்றைய தேதியில் நமது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் நீங்களே பார்க்கலாம்,’’ என்று குறிப்பிட்டனர்.
இதையடுத்து, புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கம் சென்று தேடியபோது, எல்.முருகன் பற்றி 17.09.2020 தேதியில் வெளியிடப்பட்ட உண்மையான நியூஸ் கார்டு கிடைத்தது.

எனவே, புதிய தலைமுறை நியூஸ் கார்டை எடிட் செய்து, வேறொரு நிகழ்வில் எல்.முருகனுக்கு நாய் பரிசு அளிக்கப்பட்ட புகைப்படத்தையும் எடுத்து, ஒன்றாக இணைத்து, தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது. பிரதமர் மோடி இந்திய மக்களை நாட்டு நாய்கள் வளர்க்கும்படி கூறியிருந்தார். அதேசமயம், தமிழக பாஜகவில், நாய்களுக்கு தனிப்பிரிவு தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல் தவறானது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் எடிட் செய்யப்பட்ட ஒன்று என தெளிவாகிறது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.
