
கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஆறாம் வகுப்பு வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெற்றதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

வினாத்தாள் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், பள்ளியின் பெயர் இல்லை. அதில், சர்ச்சைக்குரிய தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் தொடர்பான கேள்விகளைச் சுட்டிக்காட்டி பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், இது கேந்திரிய வித்யாலயா பள்ளியின் வினாத்தாள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை Mohamed Rafi என்பவர் 2019 செப்டம்பர் 6ம் தேதி வெளியிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கேள்வித் தாள் முழு புகைப்படத்தைப் பகிரவில்லை, எந்த பள்ளி என்று எதுவும் இல்லை. பொதுவாக கேந்திரிய வித்யாலயா பள்ளியின் வினாத்தாள் என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்கான ஆதாரத்தை அளிக்கவில்லை. இதனால், இந்த தகவல் உண்மையாக இருக்கும் என்று நம்பி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
இது உண்மையா என்று கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ஒருவரிடம் கேட்டபோது, இந்த தகவலை மறுத்தார். அதைத் தொடர்ந்து, சென்னை மண்டல துணை இயக்குநர் சி.மணியிடம் இருந்து வந்த தகவல் என்று ஒரு செய்தியை நமக்கு அளித்தார். அதில், “கேந்திரிய வித்யாலயா 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாட கேள்வித்தாளில் கேட்கப்பட்ட ஆட்சேபனைக்குரிய சில கேள்விகள் சமூக ஊடகங்களில் ஒரு கேள்வித்தாள் பகிரப்பட்டு வருகிறது. சென்னை பிராந்தியத்தில் உள்ள 49 பள்ளிகளில் எந்த ஒரு பள்ளியிலும் இந்த கேள்வித்தாள் பயன்படுத்தப்படவில்லை. சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர்களும் இதை உறுதி செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் கேள்வித்தாளுக்கும் கேந்திரிய வித்யாலயாவில் பயன்படுத்தப்படும் கேள்வித் தாளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதன் மூலம் கேந்திரிய வித்யாலயா பள்ளி கேள்வித்தாள் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தியை நாங்கள் மறுக்கிறோம்” என்று இருந்தது.
இது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, தினத்தந்தி, தினமணி, புதிய தலைமுறை என்று பல ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது தெரிந்தது.

தினத்தந்தி வெளியிட்டிருந்த செய்தியில், “இந்த கேள்வித்தாள் இடைத்தேர்வுக்காக தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம்” என சி.பி.எஸ்.இ கூறியுள்ளதா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், “எந்த பள்ளிக்கும், எந்த வகுப்புக்கும் இடைத்தேர்வுக்கான வினாத்தாளை நாங்கள் தயாரிப்பதில்லை. பொதுத்தேர்வுகளுக்கான வினாத்தாளை மட்டுமே தயாரிப்போம்” என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளதா குறிப்பிட்டிருந்தனர். தினத்தந்தி வெளியிட்ட செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார். அதில், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே 6ம் வகுப்பு சமூக அறிவியலில் அந்த பாடம் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
நம்முடைய ஆய்வில்,
கேள்வித் தாளில் கேந்திரிய வித்யாலயா என்று எந்த இடத்திலும் இல்லை.
கேந்திரிய வித்யாலயா தயாரிக்கும் கேள்வித்தாள் போல இது இல்லை, எனவே சர்ச்சைக்குரிய கேள்வித்தாள் போலியானது என்று கேந்திரிய வித்யாலயா விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக புதியதலைமுறை, தினத்தந்தியில் வெளியான செய்திகள் கிடைத்துள்ளன.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:6-ம் வகுப்பு விஷம வினாத்தாள்… சர்ச்சையில் சிக்கிய கேந்திரிய வித்யாலயா!
Fact Check By: Chendur PandianResult: False
