
கர்நாடகாவில் ஆஞ்சநேயர் கோவில் கருவறையில் இயேசு மற்றும் மேரியின் படத்தை வைத்து பூஜை செய்ய பெண் எஸ்.பி ஒருவர் வற்புறுத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பெண் போலீஸ் அதிகாரி மற்றும் கோயிலில் கருவறை விக்ரகத்தின் கீழ் இயேசு படம் இருக்கும் புகைப்படங்கள் ஒன்றாக வைத்து கொலாஜ் செய்யப்பட்டு பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “ஆஞ்சநேயர் கோவில் கருவறையில் ஏசு மற்றும் மேரியின் படங்களை வைத்து பூஜை செய்ய வற்புறுத்திய பெண் எஸ்பி? உயர் அதிகாரியின் இந்த மதவெறி செயலால் கொதித்து போயுள்ள கர்நாடக மக்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Shan Mugam என்பவர் 2020 ஆகஸ்ட் 16ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, பலரும் இந்த படத்துடன் கூடிய செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. ஜனம் டிவி என்ற இணையதளத்தில், “கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் எஸ்.பி-யாக சமீபத்தில் பதவியேற்றவர் திவ்யா சாரா தாமஸ். விஷ்வ இந்து பரிஷத் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தையொட்டி கொள்ளேகாலில் உள்ள அனுமான் கோவிலில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு வந்த எஸ்.பி திவ்யா சாரா தாமஸ், கோவிலில் இயேசு படத்தை வைத்து பூஜை செய்ய உத்தரவிட்டுள்ளார். உயர் அதிகாரி உத்தரவு என்பதால் வேறு வழியின்றி அர்ச்சகர் பூஜை செய்துள்ளார். இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.
சாம்ராஜ்நகர், கொள்ளேகால், எஸ்.பி, திவ்யா சாரா தாமஸ் ஆகிய கீ வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு கூகுளில் தேடினோம். அப்போது நியூஸ் மினிட் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், சாம்ராஜ்நகர் எஸ்.பி கோவிலில் இயேசு படத்துக்கு பூஜை செய்யும் படி கேட்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.
நடந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருந்தனர். மேலும், இது தொடர்பாக எஸ்.பி திவ்யாவிடம் பேசியதாகவும், அப்போது அவர், “என் கணவர் இந்து. நான் கிறிஸ்தவள். நான் கோவிலுக்கு சென்றேன்… ஆனால் அர்ச்சகரை பூஜை செய்யும்படி எல்லாம் கட்டாயப்படுத்தவில்லை. தவறான தகவலை சில சமூக விரோதிகள் பரப்பி வருகின்றனர்” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோயில் அர்ச்சகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அதில், “ராமஜென்ம பூமி அடிக்கல் நாட்டு விழாவின் போது இங்கு கோவிலில் பூஜை நடந்தது. அப்போது அந்த புகைப்படத்துக்கும் பூஜை செய்யப்பட்டது. இது மக்களின் உணர்வை புண்படுத்துவதால் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறியிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் அடிப்படையில் கர்நாட போலீஸ் வெளியிட்ட பதிவு மற்றும் கோவில் அர்ச்சகர் வெளியிட்ட விளக்க வீடியோவைத் தேடினோம். கர்நாடக போலீஸ் தரப்பில் ஃபேக்ட் செக் பக்கம் ஒன்றில் இது தொடர்பான தகவல் வெளியாகி இருப்பதை காண முடிந்தது. அதில், “ஆகஸ்ட் 5ம் தேதி சாம்ராஜ்நகர் கொள்ளேகாலில் இந்த நிகழ்வு நடந்தது. வெள்ள பாதிப்பு தொடர்பான ஆய்வுக்கு வந்த எஸ்.பி-யை அந்த கோயிலுக்கு அழைத்துள்ளனர்.
புதிய எஸ்.பி வேறு மத நம்பிக்கையைச் சார்ந்தவர் என்பதால், அவருக்கு இயேசுவின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து கொடுத்துள்ளனர். பூஜை செய்ய வேண்டும் என்று கோயில் அர்ச்சகர் கட்டாயப்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக கோயில் அர்ச்சகர் விளக்கம் அளித்துள்ளார்” என்று வீடியோவையும் வெளியிட்டிருந்தனர்.
அதில், அவர் எஸ்.பி-க்கு வழங்குவதற்காக பக்தர் ஒருவர் அந்த படத்தைக் கொண்டு வந்து பூஜை செய்து தரும்படி கேட்டார். அதன்படி செய்து கொடுத்தேன். எஸ்.பி கட்டாயப்படுத்தியதாக கூறப்படும் தகவல் தவறானது” என்று கூறினார்.

இதன் மூலம் இந்து கோயிலில் இயேசு படத்தை வைத்து எஸ்.பி பூஜை செய்ய வற்புறுத்தினார் என்று கூறப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஆஞ்சநேயர் கோயிலில் இயேசு, மேரி படத்தை வைத்து பூஜை செய்ய வற்புறுத்திய கர்நாடக எஸ்.பி?
Fact Check By: Chendur PandianResult: False
