
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று வீட்டைவிட்டு வெளியே வராத டிஜிட்டல் இந்தியா மக்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

அடுக்கி வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய குழாய்களுக்குள் வசிக்கும் மக்கள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வீட்டைவிட்டு வெளியில் வராத இந்தியக் குடிமக்கள்.டிஜிட்டல் இந்தியா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Raviganesh Veera என்பவர் 2020 மார்ச் 22ம் தேதி பகிர்ந்துள்ளார். இதை தற்போதும் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கைவிடப்பட்ட மிகப்பெரிய குழாய்களை மக்கள் தங்கள் வசிப்பிடமாக மாற்றிக் கொள்வது ஒன்றும் புதிது இல்லை. இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதா என்று மட்டுமே ஆய்வு மேற்கொண்டோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்த புகைப்படம் வங்கதேசத்தில் எடுக்கப்பட்டதாக பல பதிவுகள் நமக்கு கிடைத்தன. அதிலும், குறிப்பிட்ட இந்த புகைப்படம் சர்வதேச அளவில் விருதுகளைப் பெற்றதாகவும் குறிப்பிட்டு செய்திகள் வெளியாகி இருந்தன. அவற்றை பார்த்தோம்.

dailymail.co.uk என்ற ஊடகம் 2014ம் ஆண்டு வெளியிட்டிருந்த செய்தியில், வங்கதேசத்தைச் சேர்ந்த பைசல் அஸிம் வங்கதேச தலைநகர் டாக்காவில் எடுத்த புகைப்படங்கள் 2014ம் ஆண்டு மதிப்புமிக்க அட்கின்ஸ் சிட்டி ஸ்கேப் விருதை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.
2014ம் ஆண்டு கார்டியன் இதழ் வெளியிட்டிருந்த செய்தியிலும் இந்த தகவலை தெரிவித்திருந்தனர். அதில் வங்கதேச தலைநகர் டாக்காவில் வீடற்ற, ஒதுக்கப்பட்ட மக்கள் குழாய்களில் வசிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட படத்தை எடுத்து மோடியின் டிஜிட்டல் இந்தியா விஷமத்தனமான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:குழாய்க்குள் வசிக்கும் மக்கள்; இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்படவில்லை!
Fact Check By: Chendur PandianResult: False
