
பசுமாட்டிடம் பாலியல் அத்துமீறல் செய்து கொன்ற இஸ்லாமிய இளைஞன் கேரளாவில் கைது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
பசுமாடு இறந்து கிடக்கும் கொடூரமான புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “பசவை கட்டிவைத்து நீர் ஆகாரம் எதுவுமின்றி இரண்டு நாட்களாக கற்பழித்த இஸ்லாமிய இளைஞன் கேரளாவில் கைது. செய்தி… அமைதி மார்க்கம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை லட்சுமி தீபா என்பவர் 2020 மார்ச் 15ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் பசு மாட்டை இளைஞன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த கொடூர செயலில் ஈடுபட்டது இஸ்லாமியன் என்று தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, கைது செய்யப்பட்ட நபர் யார், அவருக்கு அரசியல் பின்னணி உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
கேரளாவில் பசுவிடம் பாலியல் அத்துமீறல் செய்த நபர் என்று கூகுளில் டைப் செய்து தேடியபோது பல செய்திகள் கிடைத்தன. சில செய்திகளில் குற்றவாளியின் பெயரைக் குறிப்பிடவில்லை, சில செய்திகளில் குற்றவாளியின் பெயர் சுமேஷ் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அவரது அரசியல் பின்னணி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

Search Link | thehauterfly.com | Archived Link |
மலையாளத்தில் வெளியான செய்திகளைப் பார்த்தோம். அனைத்திலும் கைது செய்யப்பட்ட நபர் சுமேஷ் என்றே குறிப்பிட்டிருந்தனர். நியூஸ் 18 மலையாளம், மாத்ருபூமி உள்ளிட்ட மலையாள செய்தி ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி இருந்தது. அனைத்திலும் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சுமேஷ் என்றே குறிப்பிட்டிருந்தனர்.
சம்பவத்தன்று கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் யூசுப் என்பவருக்கு சொந்தமான பண்ணையிலிருந்து இரண்டு வயது பசுமாட்டைத் திருடிக் கொண்டு சென்று மரத்தில் கட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் சுமேஷ். இதில் அவர் கயிற்றை கட்டிய விதம் காரணமாக கழுத்தில் சுருக்கு விழுந்து அந்த பசு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதைத் தொடர்ந்து சுமேஷை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
இவர் ஏற்கனவே இதுபோன்று பசு மாட்டிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும், எச்சரித்து அனுப்பியதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர் என்று செய்திகளில் குறிப்பிட்டிருந்தனர்.

malayalam.news18.com | Archived Link 1 |
mathrubhumi.com | Archived Link 2 |
கைது செய்யப்பட்ட நபர் இஸ்லாமியரா அது தொடர்பாக கூடுதல் தகவல் ஏதும் உள்ளதா என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவை தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்ட நபர் இஸ்லாமியர் இல்லை. அவரது அரசியல் பின்னணி தொடர்பாக எந்த ஒரு ஆதாரப்பூர்வ தகவலும் இல்லை என்றனர்.
இதன் மூலம், பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர் இஸ்லாமியர் இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், நம்பகத்தன்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பசுமாட்டிடம் பாலியல் அத்துமீறல் செய்த இஸ்லாமிய இளைஞர்?- ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: Partly False
