கொரோனா வைரஸ் பாதித்தவர்களை துரத்தி பிடிக்கும் சீன போலீசார்- வைரல் வீடியோ உண்மையா?

Coronavirus சமூக ஊடகம் | Social

‘’கொரோனா வைரஸ் பாதித்தவர்களை துரத்தி பிடிக்கும் சீன போலீசார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Video Link

இதில், போலீஸ் சீருடை அணிந்தவர்கள், ரயில் நிலையம் ஒன்றில் நுழைந்து, பரபரப்பாக ஓடிச் சென்று சிலரை கைது செய்கிறார்கள், ரயில் பயணிகளை அடிக்கிறார்கள். பயணிகள் உள்பட அனைவரும் மாஸ்க் அணிந்துள்ளனர். பார்ப்பதற்கு சீனாவில் நடந்ததுபோல இது உள்ளது. எனவே, இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். 

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், இதில் உள்ள போலீசாரின் சீருடை சற்று சந்தேகம் ஏற்படுத்துவதாக இருந்தது. பார்ப்பதற்கு, சிங்கப்பூர், மலேசியா போலீசார் போல உள்ளனர்.

எனவே, சந்தேகத்தின் பேரில் இந்த வீடியோவில் இருந்து ஃபிரேமை தனியாக பிரித்தெடுத்து, அதனை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுதொடர்பான செய்தி மற்றும் வீடியோ விவரங்கள் கிடைத்தன.

இதன்படி, இந்த வீடியோ முதலில் 2019 ஆகஸ்ட் காலத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதில், சீன மொழியில் எழுதப்பட்டு தலைப்பை கூகுள் உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்து பார்த்தோம்.

அப்போது, Prince Edward Station போலீசாருக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் இது, என்று எழுதியதாக தெரியவந்தது. எனினும், இந்த சம்பவத்தின் பின்னணி விவரங்கள் கிடைக்கவில்லை. 

இதையடுத்து, Prince Edward Station எனும் இடம் எங்குள்ளது, அங்கே ஏதேனும் போலீசார், பொதுமக்களிடையே மோதல் நிகழ்ந்ததா என்று தேடி பார்த்தோம். அதில், சில விவரங்கள் கிடைத்தன. 

2019 ஆகஸ்ட், செப்டம்பர் காலக்கட்டத்தில் ஹாங்காங்கில் உள்ள Prince Edward Metro Station பகுதியை முற்றுகையிட்டு, பொதுச் சொத்தை சேதப்படுத்திய நபர்களை ஒடுக்குவதற்காக, போலீசாரும் பதிலுக்கு வன்முறையில் இறங்கிய சம்பவத்தின் வீடியோதான் இது என்று தெரியவருகிறது. இந்த விவகாரம் பற்றி நீதிமன்ற விசாரணையும் நடைபெறுவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஹாங்காங் அரசியல் வரலாற்றில் 31 August Prince Edward station incident அல்லது 31 August MTR station incident என்றழைக்கப்படுகிறது. எனவே, இதில் இருப்பவர்கள் ஹாங்காங் போலீசார் என்றும், இந்த சம்பவம் நிகழ்ந்தது ஹாங்காங் பகுதியில் என்றும் சந்தேகமின்ற தெளிவாகிறது.

இதுதொடர்பான செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்களை கூகுளில் நாம் காண முடிகிறது.

மேலும் இதுபற்றி படிக்க கீழே சில லிங்குகள் தரப்பட்டுள்ளன.

StraitsTimes.com LinkScmp.com Link TheGuardian.com Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) குறிப்பிட்ட வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது அல்ல. ஹாங்காங்கில் 2019 ஆகஸ்ட் 31ம் தேதி எடுக்கப்பட்டதாகும்.
2) இதில் இருப்பவர்கள் கொரோனா நோயாளிகளும் அல்ல, சீன போலீசாரும் அல்ல. அவர்கள் ஹாங்காங் போலீசார், அங்குள்ள ரயில் நிலையம் ஒன்றை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது, வன்முறையை அடக்க போலீசார் இவ்வாறு செயல்பட்டுள்ளனர்.
3) இந்த விவகாரம் தொடர்பான விசாரணை இன்றளவும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:கொரோனா வைரஸ் பாதித்தவர்களை துரத்தி பிடிக்கும் சீன போலீசார்- வைரல் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False