வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனை பா.ஜ.க தொண்டர்கள் மீண்டும் தாக்கியதாக பரவும் வதந்தி!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை எதிர்கொண்டு வரும் பிரஷாந்த் பூஷனை பா.ஜ.க குண்டர்கள் தாக்கியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1

டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்ட பிரஷாந்த் பூஷன் தாக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இன்று பிஜேபி குண்டர்களால் தாக்கப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ பதிவை Manoharan Karthik என்பவர் 2020 ஆகஸ்ட் 24ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே நாக்பூரில் பா.ஜ.க நிர்வாகி ஒருவருக்கு சொந்தமானதாக கூறப்படும் 20 லட்ச ரூபாய் மதிப்புடைய பைக்கில் அமர்ந்திருந்த புகைப்படத்துடன் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் வெளியிட்ட ட்வீட் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

kalaignarseithigal.comArchived Link 1
bbc.comArchived Link 2

பிரஷாந்த் பூஷன் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வருகிறார். அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து வாதாடியும் வருகிறார். இந்த நிலையில் அவரை 2020 ஆகஸ்ட் 24ம் தேதி பா.ஜ.க குண்டர்கள் தாக்கியதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவுகிறது. 

இந்த வீடியோவைப் பார்க்கும்போது பல ஆண்டுகளுக்கு முன்பு பிரஷாந்த் பூஷனை தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சிலர் தாக்கிய வீடியோ போல் உள்ளது. மேலும், 2020 ஆகஸ்ட் 24ம் தேதி பிரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரஷாந்த் பூஷன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் அவர் மீது தாக்குதல் நடந்திருந்தால் மிகப்பெரிய வைரல் செய்தியாக மாறியிருக்கும். எனவே, இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

டைம்ஸ் நவ் வெளியிட்ட வீடியோ என்பதால், அதன் யூடியூப் பக்கத்தில் தேடிப் பார்த்தோம். அப்போது 2011ம் ஆண்டு வெளியிட்ட வீடியோ கிடைத்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோவில் இருந்த அதே காட்சிகள் அதிலும் இருந்தன. பிரஷாந்த் பூஷனைத் தாக்கியவர்கள் தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர். 

ndtv.comArchived Link 1
thehindu.comArchived Link 2

இதுகுறித்து தேடிய போது தன்னைத் தாக்கியது ஶ்ரீராம் சேனா அமைப்பினர் என பிரஷாந்த் பூஷன் கூறியதாக என்.டி.டி.வி வெளியிட்ட செய்தி கிடைத்தது. மேலும், பகத் சிங் கிராந்தி சேனா என்ற அமைப்பு தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்தான் தாக்குதல் நடத்தியதாக உரிமை கோரினார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

தொடர்ந்து தேடலில் பிரஷாந்த் பூஷனை தாக்கிவிட்டுத் தப்பிய தஜிந்தர் சிங் பக்கா என்பவர் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் சரண் அடைகிறார் என்று செய்தி கிடைத்தது. இந்த தஜிந்தர் சிங் பக்கா தற்போது டெல்லி பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக உள்ளார். நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். 

freepressjournal.inArchived Link

லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினர் சீன நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த வீரர்களை சந்திக்க பிரதமர் மோடி சென்றிருந்த போது, படுக்கை ஒன்றில் சீக்கியர் ஒருவர் அமர்ந்திருக்கும் படம் வெளியானது. அந்த படத்தில் இருப்பவர் உண்மையான ராணுவ வீரர் இல்லை பா.ஜ.க தொண்டர் என்று இவருடைய படத்தை வைத்து செய்தி வெளியானது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன் மூலம், 2011ம் ஆண்டு நடந்த வீடியோவை எடுத்து, 2020ல் பிரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டார் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிரப்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனை பா.ஜ.க தொண்டர்கள் மீண்டும் தாக்கியதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False