
கன்னியாகுமரி மாவட்டத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நடந்த பேரணியின் படம் என்று ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
சாலை முழுக்க மக்கள் தலைகளாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அதனுடன் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் படங்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் c a a க்கு எதிராக இது வரை இல்லாத அளவு இந்து கிறிஸ்டியன் முஸ்லீம் ஒற்றுமையுடன் நடந்த செம மாஸ் பேரணி கூட்டம் . ரெக்காடு” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை Indian youth Congress {TN} என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Joellinson Linson என்பவர் 2020 ஜனவரி 29ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கன்னியாகுமரியில் அனைத்து மத மக்களும் இணைந்து நடத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பேரணி என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது டெல்லியில் நடந்த பேரணியின் படம் போல உள்ளது. இதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வருவதைக் காண முடிந்தது.
ஃபேஸ்புக்கில் டெல்லியில் ஷாகின் பாகில் குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த படங்களில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில், தேதி இருந்த பகுதி கட் செய்யப்பட்டு, பாதி படத்தை மட்டும் பயன்படுத்தியிருப்பது தெரிந்தது.

Facebook Link | Archived Link | Search Link |
இவற்றுக்கு நடுவே நியூஸ் 18 உருது வெளியிட்ட செய்தி ஒன்றில் இந்த படம் வைக்கப்பட்டு இருப்பது. அதில் டெல்லி ஷாகின் பாக்கில் ஆயிரக் கணக்கானோர் திரண்டுவந்து குடியரசு தின விழாவைக் கொண்டாடினார்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

urdu.news18.com | Archived Link |
ஷாகின் பாக், குடியரசு தினம் ஆகிய கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடியபோது, குடியரசு தினத்தன்று டெல்லி ஷாகின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடி வருபவர்கள் குடியரசு தினத்தை கொண்டாடினார்கள் என்ற செய்தி கிடைத்தது.

indiatoday.in | Archived Link 1 |
theprint.in | Archived Link 2 |
அந்த படத்தையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். அதில், தொலைவில் உள்ள கட்டிடம், சாலையில் வைக்கப்பட்டிருந்த இந்திய வரைபடத்தின் வடகிழக்கு பகுதி, நடை மேம்பால சாய்வு படி என அனைத்தும் அப்படியே இருந்தது. இந்த படத்தை எடிட் செய்து வெளியிட்டிருப்பது உறுதியானது.

இது தொடர்பாக வீடியோ ஆதாரம் ஏதும் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தோம். அப்போது, நமக்கு இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட வீடியோ கிடைத்தது. அதில் இந்த படத்தில் உள்ள காட்சிகளைக் காண முடிந்தது.
நம்முடைய ஆய்வில்,
இந்த புகைப்படம் டெல்லியில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பேரணி இல்லை… குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் நடத்திய குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியின் படத்தை எடுத்து, கன்னியாகுமரியில் நடந்தது என்று தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கன்னியாகுமரியில் நடந்த சிஏஏ-வுக்கு எதிரான பேரணியின் படமா இது?
Fact Check By: Chendur PandianResult: False
