
‘’மத போதகர்களால் கற்பழிக்கப்படும் பெண்கள் காவல்துறையில் புகார் செய்யக்கூடாது,‘’ என்று போப் ஆண்டவர் சொன்னதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் ஒரு சர்ச்சை பதிவை காண நேரிட்டது. அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Pragash R Goundar என்பவர் இந்த பதிவை கடந்த மே 14ம் தேதி பகிர்ந்துள்ளார். இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக, ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முதலில் இந்த பதிவு, இவராகச் சொந்தமாக தயாரித்ததில்லை என தெரிகிறது. ஏனெனில், அதில், N News 9 Tamil என்ற பெயரில், லோகோ ஒன்று இடம்பெற்றுள்ளது. எனவே, இந்த பெயரில் ஃபேஸ்புக்கில் ஏதேனும் செய்தி ஊடகம் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் பதிவு வெளியாகியுள்ளதா, என தேடிப் பார்த்தோம்.
அப்படி தேடியபோது, PN செய்திகள் என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் பக்கம்தான் கிடைத்தது. அவர்கள்தான், N News 9 Tamil எனும் பெயரில், சர்ச்சைக்குரிய பதிவுகளை ஃபேஸ்புக்கில் வெளியிடுவதை காண முடிந்தது. ஆனால், போப் ஆண்டவர் பற்றிய இந்த நியூஸ் கார்டு எவ்வளவு தேடியும் அவர்களின் பக்கத்தில் கிடைக்கவில்லை. ஒருவேளை பதிவிட்ட பின், நீக்கிவிட்டார்களா என தெரியவில்லை.
அடுத்தப்படியாக, போப் ஆண்டவர் எதுவும் சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளாரா என கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது, கத்தோலிக்க தேவாலயங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுப்பது பற்றி, அவர் ஒரு புதிய உத்தரவை கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு வெளியிட்டுள்ளதாக, தகவல் ஆதாரம் கிடைத்தது.

இதன்படி, தி இந்து தமிழ் திசையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘’கத்தோலிக்க தேவாலயங்களில் கன்னியாஸ்திரிகளும், மறைக்கல்வி பயல வரும் சிறார்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். பேராயர்களே இப்படியான சம்பவத்தில் ஈடுபடுவதால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிப்பதில்லை. வெகு சிலர்தான் இதுபற்றி வெளியில் புகார் தெரிவிக்கிறார்கள். எனவே, போலீசில் புகார் தெரிவிக்க தயக்கமாக இருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி, சம்பந்தப்பட்ட தேவாலயத்தின் தலைமைக்கு புகார் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதற்கான சிறப்பு புகார் பிரிவை, ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும். 2020ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் இந்நடவடிக்கை அமலுக்கு வர வேண்டும். இப்படியான புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டியது கத்தோலிக்கர்களின் கடமை,’’ என்று போப் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி தி இந்து தமிழ் திசை வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதன்பேரில், ஆங்கிலத்தில் ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என தேடிப் பார்த்தோம்.

மே 9ம் தேதியன்று போப் பிரான்சிஸ் இத்தகைய உத்தரவை வெளியிட்டுள்ளார். இதுபற்றி சிஎன்என் இன்டர்நேஷனல் ஊடகம் வெளியிட்ட விரிவான செய்தி விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும். இதில், யாரேனும் பாலியல் புகார் அளித்தால், அதுபற்றி விசாரித்து 90 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட மறைமாவட்ட நிர்வாகத்தின் கடமை என்றும் போப் பிரான்சிஸ் குறிப்பிட்டிருக்கிறார். அதேசமயம், யாரையும் போலீஸ் நிலையம் போகக்கூடாது என்று அவர் எங்கேயும் குறிப்பிடவில்லை. போலீசில் புகார் அளிக்க கூச்சப்பட்டுக் கொண்டு பலர் மவுனம் காப்பதால், கத்தோலிக்க தேவாலயங்களில் நடைபெறும் உண்மை வெளியே வருவதில்லை என்பதால், குறைந்தபட்சம் தேவாலய நிர்வாகத்திடமாவது புகார் அளியுங்கள் என்றுதான் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது. அத்துடன், இந்த பதிவை பகிர்ந்த நபர், இவர் போப் ஆண்டவரா, ரேப் ஆண்டவரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மிகவும் விஷமத்தனமான சிந்தனையுடன் இப்பதிவை பகிர்ந்துள்ளதாக, நமக்கு தெரியவருகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மத போதகர்களால் கற்பழிக்கப்படும் பெண்கள் போலீசில் புகார் செய்யக்கூடாது: போப் ஆண்டவர் சொன்னது என்ன?
Fact Check By: Parthiban SResult: False
