
பிரான்ஸ் நாட்டுத் தயாரிப்புகளை குப்பையில் தூக்கி வீசிய குவைத் மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
கடையில் இருந்து ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்துவந்து குப்பை லாரியில் கொட்டும் வீடியோ பகிரப்பட்டள்ளது. நிலைத் தகவலில், “குவைத்தில் அனைத்து பிரான்ஸ் தயாரிப்பு பொருட்களையும் குப்பைகளில் வீசி எறியப்பட்டது…” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை Sheik Mohideen Ksn என்பவர் 2020 நவம்பர் 3ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரான்சில் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் பற்றிய கேலிச் சித்திரத்தைக் காட்டிய ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து பிரான்சுக்கு எதிராக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
பிரான்சில் சாலையில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது என்றும், இஸ்லாமிய பெண்ணை பிரான்ஸ் போலீஸ் கொடூரமாக தாக்கியது என்றும் பல வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றி அவ்வப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டுத் தயாரிப்புகளை குவைத் நாட்டினர் குப்பையில் வீசி எறிந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை InVID & WeVerify என்ற குரோம் எக்ஸ்டென்ஷனை பயன்படுத்தி புகைப்படமாக மாற்றி அதை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் தேடியபோது இந்த வீடியோவை சில மாதங்களாக பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.
2020 மே மாதம் 12, 13ம் தேதிகளில் பலரும் இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். அதில், சௌதி அரேபியாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தயாரிக்கப்பட்ட புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம் கொண்ட சீஸ்களை அப்புறப்படுத்திய காட்சி என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: twitter.com I Archive
தொடர்ந்து தேடியபோது அல் ஆஷா நகராட்சியில் கெட்டுப் போன உணவுப் பொருட்களை வர்த்தக துறை அமைச்சக உத்தரவு அடிப்படையில் அல் ஆஷா நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். சீஸ் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் என்ற கருத்து சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
உண்மையில் காலாவதியான பொருள் என்பதால் அப்புறப்படுத்தப்பட்டது. அதில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம் எதுவும் இல்லை என்பதை அமைச்சரகம் உறுதி செய்துள்ளது. அல் ஆஷா நகராட்சி எங்கே உள்ளது என்று தேடிப் பார்த்தோம். அப்போது அது சௌதி அரேபியாவில் இருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: al-marsd.comI Archive
பிரான்சில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விவகாரம் 2020 அக்டோபரில் நடந்தது.
இந்த வீடியோ 2020 மே மாதத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
கெட்டுப்போன சீஸ் என்பதால் அப்புறப்படுத்தப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
இதன் அடிப்படையில் பழைய வீடியோவை எடுத்து, தற்போது பிரான்சில் நிகழ்ந்து வரும் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பதிவிட்டிருப்பது உறுதியாகிறது.
முடிவு:
சௌதி அரேபியாவில் எடுக்கப்பட்ட வீடியோவை பிரான்ஸ் பொருட்கள் அழிக்கப்படுவதாக தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உரிய ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:குவைத் மக்கள் பிரான்ஸ் தயாரிப்புகளை குப்பையில் வீசினார்களா?
Fact Check By: Chendur PandianResult: False
