
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் விபசாரம் வெகுவாக குறைந்துள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாக ஒரு நியூஸ்கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
ஜெயம் அசோக் நியூஸ் என்ற பெயரில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விபச்சாரம் வெகுவாக குறைந்துள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு” என்று உள்ளது. மேலும், அவருக்கு எதிராக “வலுக்கிறது கண்டனம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
நிலைத் தகவலில், “அவனவன் , #பண_மதிப்பிழப்புக்கு எதெதுக்கோ கஷ்டபட்டு அலைஞ்சு திரியறானுக..! சங்கி மங்கி குரூப்ஸ்களுக்கு , எதுல தெரியுது பாருங்கள்..?
இவனென்ன லூசா..? கையில் பணம் இருந்தா தான் உள்ளேயே போக முடியும்ன்னு தெரியாதா..? என்னமோபோங்கடா..! நீங்க சொல்லி , நாங்க கேட்கணும்ன்னு இருக்கு..! மானங்கெட்ட மக்கள் உங்களுக்கு வாக்களிச்சிருக்காங்களே..? வேற வழி , காலக்கொடுமை அம்புட்டு தான்..! வேறொன்றுமில்லை…!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Ksb Boobathi என்பவர் நவம்பர் 11, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கருப்பு பணத்தை ஒழிக்க 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு திடீரென்று ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
இந்த நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக விபசாரம் குறைந்துவிட்டது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். பண மதிப்பிழப்பு, விபசாரம் குறைவு என்ற கீ வார்த்தைகளை வைத்து கூகுளில் ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது இது தொடர்பான செய்திகள் நமக்கு கிடைத்தன.
Search Link |
2017ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டை ஒட்டி நிருபர்களின் கேள்விக்கு ரவிசங்கர் பிரசாத் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியின்போது அவர் சொன்ன ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்து தவறான அர்த்தம் வரும் வகையில் இந்த பதிவு வெளியிட்டிருப்பது தெரிந்தது.
இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில், “விபசாரம் குறைந்தது… பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நன்மை என்ற சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்” என்று தலைப்பிட்டிருந்தனர். செய்தியைப் படித்துப் பார்த்தோம். அதில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட பல நன்மைகளை சட்டத்துறை அமைச்சர் பட்டியலிட்டார். அதில், பீகார், மேற்குவங்கம், அஸ்ஸாம் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலிருந்து சிறுமிகளை கடத்திவந்து டெல்லி போன்ற பெருநகரங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துவந்தன. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்த பெண்கள் கடத்தல் தொழில் குறைந்துள்ளது.
இதுமட்டுமல்ல… மும்பையில் நிகழும் கூலிப்படை கொலை, காஷ்மீரில் நடந்துவந்த ராணுவ வீரர்கள் மீதான கல் எறிதல், நக்சலைட் நடவடிக்கைகள் குறைந்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவை நேர்மையான நாடாக மாற்றியுள்ளது” என்று குறிப்பிட்டார் என்று இருந்தது. இதே செய்தி டெக்கான் கிரானிக்கிள் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியாகி இருந்தது. தமிழில் ஒன் இந்தியா உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
India Today | Archived Link 1 |
Deccan Chronicle | Archived Link 2 |
One India Tamil | Archived Link 3 |
நாட்டில் விபசாரம் குறைந்துள்ளது என்று கூறியதில் என்ன தவறு என்று தெரியவில்லை. பல விஷயங்களை பட்டியலிட்டு, அதில் ஒன்றாக ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளதை மிகவும் தவறான தகவல் போல பரப்பியுள்ளனர். அதுவும் 2017ல் வெளியான செய்தியை, இப்போது நிகழ்ந்தது போல குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், உண்மையும் பொய்யும் கலந்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விபசாரம் குறைந்துள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
