
‘’ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் உள்ள வங்கிகளில், 9 வங்கி நிறுவனங்களை விரைவில் நிரந்தரமாக மூட உள்ளது,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வைரலாகி வருவதாக, வாசகர் ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பி சந்தேகம் கேட்டார். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
Abdul Hameed
என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை அக்டோபர் 1, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், ‘’ *எச்சரிக்கை!!!* 9 வங்கிகள் விரைவில் நிரந்தரமாக மூடப்படும்.ரிசர்வ் வங்கி அறிக்கை!!! ?????????? மூடப்பட இருக்கும் வங்கிகள்… UCO BANK,IDBI,BANK OF MAHARASTRA,ANDRA BANK, INDIAN OVERSEAS BANK,CENTRAL BANK OF INDIA,DENA BANK, UNITED BANK OF INDIA, *எனவே இந்த வங்கிகளில் நீங்கள் அக்கவுண்ட் வைத்திருந்தால் உடனே எல்லா பணத்தையும் எடுத்து விட்டு அக்கவுண்டை க்லோஸ் பண்ணுங்கள்.இல்லையென்றால் நீங்கள் நிச்சயம் உங்கள் பணத்தை இழக்க நேரிடும்!!! எச்சரிக்கை!!!*,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த மாதம் பொதுத்துறையை சேர்ந்த 10 வங்கிகளை ஒன்று சேர்த்து, 4 வங்கிகளாக மாற்றுவதாக, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது வங்கி ஊழியர்கள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களையும் கடும் அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது.
இது பலரையும் குழப்புவதாக உள்ளதால், நமது வாசகர் ஒருவர் இமெயில் மூலமாக, சந்தேகம் கேட்கவே, நாமும் உண்மை கண்டறிய வேண்டியிருந்தது. இந்த வதந்தி கடந்த ஒரு மாதமாகவே, சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.
யூகோ வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஆந்திரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்டவை நாட்டின் முன்னணி வங்கி நிறுவனங்களாகும். இவற்றை அவ்வளவு எளிதில் மூடிவிட முடியாது.
ஆனால், மத்திய அரசு 4 வங்கிளாக ஒருங்கிணைக்க உள்ள ,10 பொதுத்துறை வங்கிகள் பட்டியலில், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. எனவே, அவற்றை மூடப்படுவதாகக் கூறுவது தவறு.
இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
9 வங்கிகளை நிரந்தரமாக மூட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருவதை தொடர்ந்து இதுபற்றி ரிசர்வ் வங்கி
உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.
EconomicTimes.com | IndiaToday.in |
ரிசர்வ் வங்கியே இதனை மறுத்துவிட்டதால், இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் 9 வங்கிகளை மூட முடிவு செய்துள்ளதா?
Fact Check By: Pankaj IyerResult: False
