
சென்னை ஐஐடி-யில் மனு தர்ம சாஸ்திரத்தில் அசைவ உணவு உட்கொள்வது பற்றி குறிப்பிட்டுள்ள கருத்து கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது போலவும், சைவம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு தனித்தனி கை கழுவும் இடம் உள்ளது போலவும் சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
மூன்று படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. முதல் படத்தில், “நூறு வருஷ காலம் வருஷந்தோறும் அசுவமேத யாகம் செய்த பயனும், மாமிச போஜனம் செய்யாத பயனும் சமம் – மனு தர்ம சாத்திரம்” என்று உள்ளது. இரண்டாவது படத்தில், சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கான நுழையும், வெளியேறும் வழி என்று உள்ளது. மூன்றாவது படத்தில், சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கான கை கழுவும் இடம் என்று உள்ளது. இந்த படம் எங்கே எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடவில்லை.
நிலைத் தகவலில், ஐ.ஐ.டி சென்னையில் எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், அதில், “ஐஐடி-சென்னை அக்ரகாரத்தில் நவீன தீண்டாமை, காணாமை, ஏற்றுக்கொள்ளாமை!
படம் 1: ஐஐடி உணவுக்கூடத்தில் அசைவம் சாப்பிடுவோருக்கு மட்டும் எதிராக எழுதப்பட்ட #அதர்மம்.
படம் 2: #ஐஐடிசைவங்கள் இருவகைப்படும். ‘வெங்காயம்-பூண்டு இல்லா சைவம்’ அதில் ஒருவகை. இரண்டு சைவத்துக்கும் தனித்தனி உணவுக்கூடம்.
படம் 3: அசைவம்/சைவம் சாப்பிடும் இடம்தான் தனித்தனியாக பார்த்திருக்கிறேன்… ஆனால், #கைகழுவுமிடமும் #தனித்தனியாக ஐஐடியில்தான் காண்கிறேன்.
இதில் இரண்டை கேள்விக்குட்படுத்தி கொஞ்சம் சிந்திப்போம்:
1. அசைவதுக்கு எதிராக மட்டும் வைக்கப்பட்டது போல… பூண்டு-வெங்காயத்துக்கு எதிரான ஏதேனும் ஒரு வாசகம், அதை சாப்பிடும் இடத்தில் ஏதுமில்லையே ஏன்..?
2. தனித்தனி உணவுக்கூடம் இருந்தாலும்… பூண்டு-வெங்காயமற்ற சைவத்துக்கும் சாதா சைவத்துக்கும் தனித்தனி கைகழுவும் இடமில்லையே ஏன்..?
அப்படின்னா… இந்த பாகுபாடுகள் யாவும் ‘உணவை அடிப்படையாக வைத்து அல்ல’ என்று நமக்கு எளிதாக புரிகிறதல்லவா..?!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, S P Udayakumaran என்பவர் நவம்பர் 18, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னை ஐஐடி-யில் தமிழுக்கே முக்கியத்துவம் இல்லை என்று சொல்லப்படுகிறது… அப்படி இருக்கும்போது மனு தர்ம சாஸ்திரத்தை தமிழில் எழுதிவைத்திருப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பலரும் இந்த படத்தை ஐ.ஐ.டி-யில் எடுக்கப்பட்டது என்று பகிர்ந்திருந்தனர்.

Search Link |
தொடர்ந்து சமூக ஊடகங்களில் தேடியபோது, Frederick Engels ST என்பவர் வெளியிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவு நமக்கு கிடைத்தது. அதில், “மிக அதிக அளவில் ஷேர் செய்யப்படும் மேற்கண்ட படத்தில் கல்வெட்டை சுட்டிக்காட்டும் நபர் நான்தான். முதலில், அந்த புகைப்படம் கோயமுத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் எடுக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறேன். என்னுடைய நண்பர் இந்த புகைப்படத்தை எடுத்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார். இந்த புகைப்படம் சென்னை ஐஐடி-யில் எடுக்கப்பட்டது இல்லை. அன்புடன் ஆர்.எஸ்.எஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் எப்படி இந்த புகைப்படம் சென்னை ஐஐடி-யில் எடுத்தது என்ற முடிவுக்கு வந்தார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய அனுமதியின்றி இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Facebook Link | Archived Link |
இந்த பதிவுக்கு அன்புடன் ஆர்.எஸ்.எஸ் பதிலளித்து இருந்தது. அதில், “இந்த புகைப்படம் சென்னை ஐஐடி-யில் எடுக்கப்பட்டது என்ற தகவல் எங்களுக்கு எப்படி கிடைத்தது என்ற விவரத்தை உங்கள் இன்பாக்சுக்கு அனுப்பியுள்ளோம். உங்கள் படத்தை பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கெகாள்கிறோம். அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது – அட்மின்” என்று பதிவிட்டிருந்தனர்.
இதன் மூலம் மனுநீதி கல்வெட்டு சென்னை ஐ.ஐ.டி-யில் உள்ளது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
அடுத்து சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கான நுழைவு மற்றும் கை கழுவும் இடம் என்று உள்ள படங்கள் உண்மையில் ஐஐடி-யில் எடுக்கப்பட்டது தானா என்று ஆய்வு செய்தோம். இது தொடர்பாக கூகுளில் தேடியபோது, சென்னை ஐஐடி-யில் உள்ள அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்கிள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தது தெரிந்தது. அதில், சென்னை ஐஐடி-யில் தீண்டாமை தொடர்கிறது. அதில் உணவு அடிப்படையில் பாகுபாடு பார்க்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தனர். 2018 டிசம்பர் 13ம் தேதி இந்த பதிவு வெளியாகி உள்ளது.
Archived Link |
இந்த புகைப்படங்கள் அடிப்படையில் அப்போதே டைம்ஸ் ஆப் இந்தியா, நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
இது குறித்து மாணவர்கள் நிர்வாகத்துக்கு புகார் அளித்துள்ளனர். அதற்கு பதில் அளித்த ஐஐடி நிர்வாகம், “எங்களுக்குத் தெரியாமல் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது. அவை விரைவில் அகற்றப்படும். மாணவர்களின் சிரமத்துக்கு வருந்துகிறோம். இதை நீக்கியபிறகு, இது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்று மெயில் அனுப்பியதாக நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், நீக்குவதற்கு முன்பு, நீக்கப்பட்ட பிறகு படங்களையும் அது வெளியிட்டுள்ளது.
timesofindia.indiatimes.com | Archived Link 1 |
nakkheeran.in | Archived Link 2 |
நம்முடைய ஆய்வில்,
சென்னை ஐஐடி-யில் மனுநீதி எழுதப்பட்டுள்ளது என்ற புகைப்படம் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி-யில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனி கவுண்டர், தனி கை கழுவும் இடம் உள்ளதாக வெளியான படம் உண்மையானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சைவ உணவு கவுண்டர் படம் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது என்பதும், புகார் அளிக்கப்பட்டதும் அது அகற்றப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், உண்மையும் தவறான செய்தியும் கலந்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சென்னை ஐஐடியில் மனுதர்ம சாஸ்திரம், தனித்தனி கை கழுவும் இடம் என்று பகிரப்படும் படங்கள் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
