
‘’கேரள அரசு சென்னைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்புவதாகச் சொன்னதை நிராகரித்த எடப்பாடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Admk Fails என்ற ஃபேஸ்புக் ஐடி, 2019 ஜூன் 20ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன் புகைப்படத்தையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தையும் பகிர்ந்து, ஒரு மீம் தயாரித்து, வெளியிட்டுள்ளனர். அதன் மேலே , ‘’உதவாக்கரை பழனிசாமி,’’ என்ற தலைப்பிட்டுள்ளனர். அந்த மீமில், உதவ முன்வந்த கேரளா, முட்டுக்கட்டை போட்ட உதவாக்கரை எடப்பாடி என்று எழுதியுள்ளனர். அத்துடன், சென்னைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்ப தயார் என்று கேரள முதல்வர் சொன்னதாகவும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை, தண்ணீர் அனுப்ப வேண்டாம் என, எடப்பாடி பழனிசாமி சொன்னதாகவும் எழுதியுள்ளனர்.
இதனை உண்மை என நம்பி, பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவை வெளியிட்ட ஐடி பெயரே, அஇஅதிமுக மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் என்பதை உணர்த்துகிறது. அத்துடன், இந்த பதிவின், கமெண்ட்கள் அனைத்தும் மிகக் கீழ்த்தரமாக ஒரு முதல்வர் என்று கூட பாராமல் பகிரப்பட்டுள்ளன. இதன்படி, எடப்பாடி பழனிசாமி இப்படி எதுவும் சொன்னாரா என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.
அதில், அவர் அப்படி எங்கேயும் சொல்லவில்லை எனவும், சம்பந்தப்பட்ட நாளன்று அவர் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுவிட்டார் எனவும் தெரியவந்தது. சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியை தொடர்ந்து, உடனடியாக, தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்திருக்கிறார். இதுபற்றி தி இந்து தமிழ் திசை வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

முதல்வர் இல்லாத நிலையில், அதிகாரிகள் சிலர் பேசியதை தவறாக புரிந்துகொண்டு, கேரள முதல்வர் அவசரப்பட்டு, தமிழகம் தங்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டது என்று கூறி, ட்விட்டரில் பதிவு ஒன்றை எழுதியிருந்தார் எனவும் தெளிவாகிறது. கேரள முதல்வரின் ட்விட்டை முன்வைத்து, பலரும் உடனடியாக வதந்தி பகிர தொடங்கியிருக்கிறார்கள். இதுபற்றி மாலைமலர் வெளியிட்ட விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, ஜூன் 21ம் தேதி ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் வேலுமணி இந்த தகவலை கடுமையாக மறுத்திருக்கிறார். அது மட்டுமின்றி, ‘’முதல்வர் தலைமையில் இன்று (ஜூன் 21) நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்தான் இதுபற்றி இறுதி முடிவு செய்யப்படும்,’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
எனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக ஏதேனும் பேட்டி அளித்தாரா என தகவல் தேடினோம்.

இதன்படி, தண்ணீர் தட்டுப்பாடு பற்றி ஆலோசனை கூட்டம் நடத்திய பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வீடியோ ஆதாரம் கிடைத்தது. இந்த வீடியோவை ஒன் இந்தியா ஜூன் 22ம் தேதி வெளியிட்டுள்ளது. அதில், தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி தெளிவாக முதல்வர் பேசியுள்ளார்.
குறிப்பாக, கேரள முதல்வர் தண்ணீர் தருவதாகச் சொன்ன தகவலை அவர் பாராட்டி பேசியுள்ளார். மருத்துவமனை சென்றிருந்ததால், இந்த தகவல் தெரியாமல் போய்விட்டது என்றும், இதுபற்றி பரவும் வதந்திகளில் உண்மையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கேரளா தருவதாகச் சொன்ன 20 லட்சம் லிட்டர் தண்ணீர் போதாது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்த வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவின், 8.45 நிமிடத்தில், கேரள முதல்வர் தண்ணீர் அளிப்பதாகச் சொன்ன விசயம் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து பேசுகிறார்.

இதே செய்தியை பிபிசி தமிழ் இணையதளமும் விரிவாக வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அதாவது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனை சிகிச்சைக்குச் சென்றிருந்த நேரம், கேரள முதல்வர் பினராயி விஜயன் தண்ணீர் தருவதாக, தகவல் அளித்துள்ளார். இதற்கு, தமிழக அதிகாரிகள் சிலரே பதில் அளித்துள்ளனர். முதல்வர் பழனிசாமி நேரடியாக மறுப்பு எதுவும் தரவில்லை. இந்த தண்ணீர் போதாது என்றுதான் கூறியிருக்கிறார்கள். ஆனால், இதனை தவறாகப் புரிந்துகொண்ட பினராயி விஜயன் உடனடியாக ட்விட்டரில் பதிவு வெளியிட, ஊடகங்களும், சமூக ஊடக பயனாளர்களும் இதை வைத்தே வதந்தி பரப்ப தொடங்கியதும், நமக்கு தெளிவாக தெரியவருகிறது.
இதுதொடர்பாக, நக்கீரன் வெளியிட்ட விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கேரள முதல்வரின் தண்ணீர் உதவியை நிராகரித்தார் இபிஎஸ்: ஃபேஸ்புக் வதந்தியால் பரபரப்பு
Fact Check By: Parthiban SResult: False
