
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீசாரிடம் “நான்தான் முதல்வர் எடப்பாடி” என்று கூறி கெஞ்சுவது போல ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
எடப்பாடி பழனிசாமியின் படங்கள் நான்கை கொலாஜ் செய்து பதிவிட்டுள்ளனர். அதில் போலீசாரிடம் எடப்பாடி பழனிசாமி “யோவ் நான்தான் முதல்வர் எடப்பாடி” என்று கூறுவது போலவும் அதற்கு போலீஸ்காரர் “யாருடா கோமாளி நீ..?” என்று தள்ளிவிடுவது போலவும் பதிவிட்டுள்ளனர்.
இந்த பதிவை பாசிசபாஜக ஆட்சிஒழிக என்ற ஃபேஸ்புக் பக்கம் டிசம்பர் 1, 2019 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்ட போது அவரை சந்திக்க அ.தி.மு.க-வினர் பெருமளவில் பெங்களூருவில் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ள படத்தை இப்போது நிகழ்ந்தது போல பகிர்ந்துள்ளனர். தொப்பியைப் பார்க்கும்போதே அது பெங்களூரு போலீஸ் என்பது தெரிகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டதுமே முதலமைச்சர் பதவி காலியாகிவிட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்தான் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. ஆனால், தன்னை முதலமைச்சர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக இந்த பதிவில் உள்ளது. இது எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்பதற்கு பல ஆண்டுகளுக்கு முந்தைய படம் என்பதை நிரூபிக்க ஆதாரம் கிடைக்கிறதா என்று தேடினோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இதே படங்கள் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருவது தெரிந்தது. அதில், “2014ம் ஆண்டு பெங்களூரு சிறையில் இருந்த ஜெவை பார்க்க சென்ற அன்றைய அமைச்சர் இன்றைய முதல்வர் எடப்பாடி” என்று குறிப்பிட்டிருந்தனர்.
Archived Link |
தமிழக அமைச்சர்களை விரட்டும் படங்கள் 2014 ம் ஆண்டு தினமலரில் வெளியாகி இருந்தது.
dinamalar.com | Archived Link |
இது பழைய படம்தான், முதலமைச்சர் ஆன பிறகு எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்ய தமிழக அமைச்சர் ஜெயக்குமாரைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர் இது, “விஷமத்தனமான பதிவு, 2014ல் எடுக்கப்பட்டது. அப்போது அவர் முதல்வர் இல்லை, பொதுப் பணித்துறை அமைச்சர்தான்” என்றார்.
இந்த ஆதாரம் அடிப்படையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கர்நாடக போலீசார் விரட்டியடித்தார்கள் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:போலீசிடம் கெஞ்சிய எடப்பாடி பழனிசாமி- ஃபேஸ்புக் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
