தி.மு.க-வுடன் இணைய டி.டி.வி.தினகரன் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டார் என்று ஏஷியாநெட் செய்தி வெளியிட்டிருந்தது. அது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

TTV 2.png
Facebook LinkArchived Link 1Article LinkArchived Link 2

டிசம்பர் 9ம் தேதி ஏஷியாநெட் தமிழ் இணையதளம் வெளியிட்ட செய்தியை ஏஷியாநெட் தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

அதில், "தி.மு.க-வுடன் இணைய முடிவு! டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு" என்று குறிப்பிட்டிருந்தனர்.

உண்மை அறிவோம்:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை அ.தி.மு.க பொதுச் செயலாளராக அ.தி.மு.க நிர்வாகிகள் தேர்வு செய்தனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார். அது முதல் தி.மு.க-வுடன் இணைந்து செயல்படுகிறார், தி.மு.க-வுக்கு சாதகமாக நடந்துகொள்கிறார் என்று அவர் மீது அ.தி.மு.க நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். செந்தில் பாலாஜி, தங்க தமிழச்செல்வன், கலைராஜன் உள்பட பல தினகரன் ஆதரவாளர்கள் தற்போது தி.மு.க-வில் இணைந்துவிட்டனர்.

இந்தநிலையில், தி.மு.க-வுடன் டி.டி.வி.தினகரன் இணைய முடிவு என்றும் இதற்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பரபரப்பான இந்த தகவல் உண்மையா என்று அறிய அந்த செய்தியைப் பார்த்தோம்.

லீட் பகுதியில், "உள்ளாட்சித் தேர்தல் குறித்து தி.மு.க உச்சநீதிமன்றத்துக்குப் போனால் அமமுக-வும் கோர்டை நாடும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிரடியாக தெரிவித்தார்" என்று இருந்தது. இதன் மூலம் பரபரப்புக்காக தலைப்பிட்டுள்ளார்களோ என்று தோன்றியது.

TTV 3.png

செய்தியை முழுவதுமாக படித்துப் பார்த்தோம். எந்த இடத்திலும், தி.மு.க-வுடன் இணைய உள்ளோம் என்று டி.டி.வி.தினகரன் கூறவில்லை. இன்னும் சொல்லப் போனால் தலைப்பு, லீட் தவிர தி.மு.க என்ற வார்த்தையே அந்த செய்தியில் இல்லை. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் அவர் கூறியிருந்தார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறுபவர் எப்படி தி.மு.க-வுடன் இணைவேன் என்று கூறுவார் என்ற கேள்வியும் எழுந்தது.

ஒன்றுக்கு இரண்டு முறை படித்தபோது, "எங்களுக்கு நீதி தேவதை துணை இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் கோர்ட்டை நாடினால், அ.ம.மு.க கோர்ட்டை நாடும்" என தெரிவித்தார் என்று இருந்தது. அதில் கூட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நீதிமன்றத்தை நாடுவேன் என்று கூறவில்லை, தனியாக வழக்கு தொடரப்படும் என்ற அர்த்ததில்தான் கூறியுள்ளார்.

TTV 4.png

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி வருகிறது. அதனால், எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடினால், அமமுக-வும் கோர்டை நாடும் என்ற டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டதை வைத்து தி.மு.க-வுடன் இணைய முடிவு என்று தலைப்பிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. பரபரப்பை கிளப்ப வேண்டும், அதிகம் பேர் தங்கள் இணையதள பக்கத்துக்கு வர வேண்டும் என்ற நோக்கில் தவறான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது உறுதியானது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது; பரபரப்புக்காக அப்படி தவறாக தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தி.மு.க-வுடன் இணைய டி.டி.வி முடிவு?- அதிர்ச்சி தந்த ஏஷியாநெட் செய்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False Headline