
தமிழ்நாட்டில் மது பாட்டில் வாங்கிச் செல்லும் பெரியார் பேத்திகள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையில் தமிழகத்தில்தான் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
பெண்மணி ஒருவர் கையில் மது பாட்டிலுடன் நடந்து செல்லும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில் “கர்நாடகாவை அடுத்து தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி. பெரியார் பேத்திகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Sathya Bala என்பவர் 2020 மே 7ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மது அருந்துவது உடல்நலத்துக்கு கேடு, இதில் ஆண் அருந்தலாம், பெண் அருந்தக் கூடாது என்று விவாதம் நடத்துவதே வீணான வேலை… இங்கே மது பாட்டில் வாங்கிச் செல்லும் பெண்ணை பெரியார் பேத்திகள் என்று விமர்சித்து வேறு வித சர்ச்சையை கிளப்பியுள்ளனர். உண்மையில் இந்த பெண் புகைப்படம் தமிழகத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது பலரும் இந்த புகைப்படத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. இவற்றுக்கு நடுவே கன்னட பிரபா என்ற செய்தி ஊடகத்தில் இந்த படம் பகிரப்பட்டு இருப்பதைக் காண முடிந்தது. ஆனால், எங்கே, எப்போது இந்த படம் எடுக்கப்பட்டது என்பதை கண்டறிய முடியவில்லை.
தொடர்ந்து தேடியபோது இந்தியன் எக்ஸ்பிரஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியான புகைப்படம் நமக்கு கிடைத்தது.
https://twitter.com/NewIndianXpress/status/1257714065968820225
2020 மே மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டிருந்த அந்த பதிவில் விசாகபட்டினத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். தமிழகத்தில் மே 7ம் தேதிதான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நம்முடைய ஆய்வில்,
இந்த புகைப்படம் 2020 மே 5ம் தேதி விசாகபட்டினத்தில் எடுக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் மே 7ம் தேதிதான் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தமிழக்தில் பெரியார் பேத்திகள் மது வாங்குகிறார்கள் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
