
அயோத்தி ராமர் கோவில் மணியை குரங்கு ஒன்று அடிக்கிறது எனக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
கோவில் கொடி மரத்தை குரங்கு ஒன்று அசைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பூஜை நேரத்தில் மனிதனால் அசைக்க முடியாத ஆலைய மணியை அசைக்கும் குரங்கு…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை ஆன்மிக தளம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மே 22 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அயோத்தியில் ராமர் கோயிலில் பூஜை நேரத்தில் கோயில் மணியடிக்கும் குரங்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முழுமையான கோயில் கட்டும் பணி தற்போது தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் இந்த கொடி மரத்தைப் பார்க்கும் போது தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் உள்ள கொடி மரம் போல உள்ளது. ராமர் கோயிலில் இது போன்ற கொடி மரம் உள்ளதா, அங்கு இந்த வீடியோ எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோவை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது பலரும் அயோத்தியில் ராமர் கோயிலில் மணி அடிக்கும் குரங்கு என்று பலரும் பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது. அவற்றுக்கு நடுவே, இந்த வீடியோ தேவ் நாராயணா துர்கா நரசிம்மா சுவாமி கோயிலில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்டு ஒரு யூடியூப் வீடியோ கிடைத்தது. அது 2020 மே 6ம் தேதி பதிவிடப்பட்டு இருந்தது.
அதே நேரத்தில் 2018ம் ஆண்டு வெளியான யூடியூப் வீடியோவில் இந்த காணொலி கர்நாடகாவில் உள்ள தேவராயன்னா துர்கா கோயில் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நம்முடைய ஆய்வின் போது ஓராண்டுக்கும் மேலாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.
எனவே, 2020 மே மாதம் வெளியான யூடியூப் வீடியோவில் குறிப்பிட்ட தகவலை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டது. மேலும் இரண்டு பதிவிலும் ஒரே மாதிரியான கோயில் பெயர் கூறப்படுவதால் கர்நாடக மாநிலத்தில் தேவ்நாராயணா துர்கா நரசிம்மா ஸ்வாமி கோயில் எங்கு உள்ளது, அங்குள்ள கொடி மரம் எப்படி உள்ளது என்று ஆய்வை மேற்கொண்டோம்.
அப்போது கர்நாடக மாநிலம் தும்கூரு அருகே இந்த கோயில் இருப்பது தெரிந்தது. அந்த கோவிலில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. அதில் கொடி மரம் இருந்த பகுதியும், குரங்கு கொடி மரத்தை ஆட்டும் வீடியோவில் இருந்த பகுதியும் ஒத்துப் போவதை காண முடிந்தது. இரண்டு வீடியோவில் உள்ள கொடி மரமும் பாதி தூரத்துக்கு தாமிரம் பொருத்தப்பட்டும் அதற்கு மேல் கருப்பாக இருப்பதை காண முடிகிறது.
அதே போல் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட குரங்கு மணி அடிக்கும் வீடியோவின் கடைசி பகுதியில் கொடி மரத்தில் இருந்து குரங்கு கோயில் கோபுரம் மீது தாவிச் செல்லும் காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த இடமும், தும்கூரு அருகில் உள்ள கோயிலின் கொடிமரத்தின் பக்கத்தில் உள்ள கோபுரமும் ஒத்திருப்பதை காண முடிகிறது.
இதன் மூலம் இந்த வீடியோ அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் எடுக்கப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அயோத்தி ராமர் கோயில் மணியடிக்கும் குரங்கு; தவறான தகவல்!
Fact Check By: Chendur PandianResult: False
