
மோடி அரசுக்கு எதிராக கேள்வி கேட்டதால், மும்பையில் பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

முகம் முழுவதும் அடிவாங்கிய நிலையில் பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடி அரசின் தவறுகளை கேள்வி கேட்டதற்காக தாக்கப்பட்ட மும்பை ஊடகவியலாளர் நிகிதா ராவ். கடந்த 2 நாட்களில் காவி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட 4-வது ஊடகவியலாளர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, பேஸ்புக் அரட்டை என்ற பக்கத்தில், Enayathullah Mohamed என்பவர் 2019 ஜூன் 10ம் தேதி பதிவிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மும்பை பத்திரிகையாளர் நிகிதா ராவ் தாக்கப்பட்டாரா என்று தேடினோம். அப்போது, www.boomlive.in என்ற இணைய தளத்தில் இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டது தெரிந்தது. அதேபோல், நம்முடைய மராத்தி ஃபேக்ட் கிரஸண்டோவில் (marathi.factcrescendo.com) உண்மை கண்டறியும் ஆய்வு நடந்தது தெரியவந்தது.
அந்த ஆய்வில், நிகிதா ராவ் என்று பத்திரிகையாளர் யாராவது மும்பையில் இருக்கின்றனரா என்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில், ஃபேஸ்புக்கில் இந்தியில் தேடியபோது ஒரு செய்தி கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.
2017 நவம்பர் 23ம் தேதி Bihar News Express.Suresh Gupta என்பவர் ஃபேஸ்புக் பதிவில், அனைத்திந்திய பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கவுன்சிலின் மகாராஷ்டிர மாநில தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த நிகிதா ராவுக்கு வாழ்த்துக்கள் என்று இருந்தது.
இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகளை தொடர்புகொண்டு, நிகிதா ராவ் தொலைபேசி எண்ணைப் பெற்று அவரிடம் பேசியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் கல்யாணில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரிடம் பூம் லைவ் நிருபர்கள் பேசியுள்ளனர். அப்போது அவர், “நான்கு நாட்களுக்கு முன்பு குண்டர்களால் தாக்கப்பட்டேன். சமூக ஊடகங்களில் பகிரப்படும் படம் என்னுடையதுதான். ஆனால், மத்திய அரசை கேள்வி கேட்டதால் தாக்கப்பட்டேன் என்ற தகவல் தவறு.
கல்யாண் பகுதியில் விவசாயிகள் நிலத்தை கைப்பற்றி கட்டுமானங்கள் கட்டப்படுகின்றன. விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தரம் தன்னார்வ தொண்டராக தற்போது நிகிதா ராவ் செயல்பட்டு வருகிறார். அதனுடன், ஃப்ரீலேன்ஸ் பத்திரிகையாளராகவும் அவர் உள்ளார். இந்த நிலையில்தான் அவர் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர் கூறுகையில், “விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கப் போராடி வருகிறேன். அந்த பகுதியில் விவசாயிகள் நிலத்தை கைப்பற்றிய பில்டர் ஒருவர், இழப்பீடு தொகையை வழங்க மறுத்து வருகிறார். அவர்தான் நான்கு நாட்களுக்கு முன்பு ஆட்களை அனுப்பித் தாக்கினார்” என்று கூறியுள்ளார்.
ஆனால், தன்னைத் தாக்கிய பில்டரைப் பற்றி அவர் எதையும் கூற மறுத்துவிட்டார். மேலும் போலீசில் புகார் செய்தது பற்றியும் எதையும் கூற அவர் மறுத்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த புகைப்படத்தை அகில இந்திய பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு தேசிய பொதுச் செயலாளர் முதலில் வெளியிட்டுள்ளார். ஆனால், அது மற்றவர்களால் தவறாக பரப்பப்பட்டு வந்தது தெரியவந்ததுள்ளது.

நாம் மேற்கொண்ட ஆய்வில், மத்திய அரசுக்கு எதிராக கேள்வி கேட்டதால் மும்பையில் பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
விவசாயிகளுக்காக போராடி வரும் தன்னார்வ தொண்டரும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளருமான நிகிதா ராவ், பில்டர் ஒருவரால் தாக்கப்பட்டதாக செய்தி கிடைத்துள்ளது. இதை நிகிதா ராவ் உறுதி செய்துள்ளார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதாக வெளியான மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மோடி அரசுக்கு எதிராக கேள்வி கேட்டதால் பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டாரா?
Fact Check By: Praveen KumarResult: False
