
நடிகை வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அமைச்சர் செல்லூர் ராஜூ படத்துடன் புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு போன்று, ஆனால் புதிய தலைமுறை லோகோ எதுவும் இல்லாத நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொரோனா “வைரஸ்” காரணமாக நடிகை வனிதா விஜயகுமார் திருமணத்திற்கு செல்லாதது வருத்தம் அளிக்கிறது நிச்சயம் அடுத்த திருமணத்திற்கு வருவேன் – அமைச்சர் செல்லூர் ராஜூ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நியூஸ் கார்டை இணையதள திமுக என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Balushree என்பவர் 2020 ஜூலை 4ம் தேதி பகிர்ந்திருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க ஆதரவு ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. கிண்டலுக்காக பதிவு செய்திருக்கலாம் என்று தோன்றியது. அதே நேரத்தில் ஃபேஸ்புக்கில் பலரும் இந்த நியூஸ் கார்டை ஷேர் செய்து வருவது அதிர்ச்சியை அளித்தது. மேலும், தி.மு.க பக்கத்தில் பலரும் இது உண்மையான தகவல் என்ற அளவில் கருத்தைப் பகிர்ந்திருப்பது ஆச்சரியத்தை அளித்தது.
மேலும் இதே கருத்தை நாம் தமிழர் சீமான் கூறியது போலவும் சிலர் ஷேர் செய்து வருகின்றனர். பலராலும், அதிக அளவில் இந்த நியூஸ் கார்டு செய்யப்படுவதைத் தொடர்ந்து இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தினோம்.
அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் உள்ளார். அவர் அங்கு நடக்கும் துறை சார்ந்த நிகழ்ச்சி மற்றும் மதுரையில் நடந்து வரும் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்யும்போது பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வருகிறார். சமூக ஊடக பக்கங்கள் இருந்தாலும், அதில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது. ஆய்வுக்கூட்டம் நடத்தியது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் கொண்டு மூட முயற்சித்ததில் மிகவும் பிரபலமானவர் செல்லூர் ராஜூ. அதை வைத்து அவரை எதிர்க்கட்சியினர் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். அவர் நடிகை வனிதா பற்றி கருத்து கூறியிருந்தால் அது அப்போதே ஹாட் நியூசாக இருந்திருக்கும். அதன் அடிப்படையில் பல மீம்கள் வந்திருக்கும். நடிகை வனிதாவின் திருமணம் கடந்த ஜூன் 27ம் தேதி நடந்தது.
அதன் பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து ஏதும் தெரிவித்துள்ளாரா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அவருடைய ட்விட்டர் பக்கத்திலும் எந்த கருத்தும் இல்லை. இது தொடர்பாக மதுரை அ.தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டபோது, தி.மு.க-வினர் கிண்டல் செய்யும் வகையில் இந்த பதிவை பரப்பி வருகின்றனர். அமைச்சர் வனிதா பற்றி கருத்து எதையும் கூறவில்லை என்றனர்.
இதன் அடிப்படையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக பகிரப்பட்டு வரும் தகவல் தவறு என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை!
Fact Check By: Chendur PandianResult: False
