
“ராகுல் காந்தியிடம் இந்த அளவுக்கு நடந்துகொள்ளும் உத்தரப்பிரதேச காவல்துறை இஸ்லாமியர்களிடம் எந்த அளவுக்கு நடந்துகொள்ளும்” என்று பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்திருக்கும் ராகுல் காந்தியின் கையைப் பிடித்து போலீஸ் அதிகாரி ஒருவர் இழுக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். போலீசார் பலர் அவர்களைச் சுற்றி வளைக்கின்றனர். மற்றொருவர் மோட்டார் பைக்கின் சாவியை எடுக்க முயல்கிறார்.
நிலைத் தகவலில், “பேசும் படம். உ.பி காவல்துறை ராகுல் காந்தியிடமே இந்த அளவுக்கு நடந்துகொள்கிறது என்றால், இஸ்லாமிய மக்களிடம் எப்படி நடந்துகொள்ளும் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Md Fazil என்பவர் 29 டிசம்பர் 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என இரு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சி நடந்தபோது, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு தடையை மீறி போராட்டம் நடத்தச் சென்றபோது நடந்த சம்பவம் போலத் தெரிந்தது. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்துக்கு ராகுல் காந்தி போனது போலவும் தெரியவில்லை. எனவே, இந்த படம் சமீபத்தில் நடந்ததாகவோ, உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாகவே இருக்க வாய்ப்பில்லை என்பதால் தேடுதலில் இறங்கினோம்.
Search Link |
முதலில் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2017ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் மன்ட்சாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறவும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கவும் வந்த ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார் என்று இந்த படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தனர். தமிழிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், குறிப்பிட்ட அந்த படத்தை வைக்கவில்லை. ஆங்கிலத்தில் வெளியான செய்திகளில் நீல சட்டை அணிந்த நபர் உடன் ராகுல் காந்தி பயணிக்கும் வேறு படங்களை வைத்திருந்தனர்.
patrika.com | Archived Link 1 |
tamil.samayam.com | Archived Link 2 |
rediff.com | Archived Link 3 |
தொடர்ந்து தேடியபோது பல இந்தி ஊடகங்களில் இந்த படத்துடன் கூடிய செய்திகள் இருந்தன. மேலும், என்.டி.டி.வி வெளியிட்ட வீடியோவும் நமக்கு கிடைத்தது. அதில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மத்திய பிரதேசத்துக்குள் நுழையும் ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்துவதும், காரில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி மோட்டார் சைக்கிளில் ஏறி செல்வதும் அதிலிருந்தது. அந்த வீடியோவில் நீல நிற சட்டை அணிந்தவர் பைக்கில் ராகுல் காந்தி ஏறி செல்வதைக் காண முடிந்தது. அதே நேரத்தில், இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில் ராகுல் காந்தியின் மோட்டார் பைக் பயணம் ஓரளவுக்குக் கொஞ்சம் தெளிவாக தெரிந்தது.
Archived Link |
இதன் மூலம் 2017ம் ஆண்டு மன்ட்சாரில் தடையை மீறி ராகுல் காந்தி நுழைய முயன்ற படத்தை எடுத்துப் போட்டு உத்தரப் பிரதேச போலீசார் ராகுல் காந்தியிடம் நடந்துகொள்ளும் விதம் என்று தவறான தகவலைப் பரப்பியது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ராகுல் காந்தியிடம் தவறாக நடந்துகொண்ட உத்தரப்பிரதேசம் போலீசார்?
Fact Check By: Chendur PandianResult: False
