
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி கொரோனா நிவாரண நிதி வசூலில் இருந்து ரூ.1 கோடிக்கு புடவை வாங்கி அணிந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானி குடும்பத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “ரூ.1 கோடி தங்க ஜரிகை புடவை கட்டி கெத்து காட்டிய துர்கா. கொரோனா நிவாரண நிதி கலெக்ஷன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Manivannan Agni என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 5ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் இந்த புகைப்பட பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
அரசியல் பிரபலங்களின் ஆடைகளின் மதிப்பு எவ்வளவு என்பதை சமூக ஊடகங்களில் விவாதிப்பது வாடிக்கையாக மாறிவிட்டது. அந்த வகையில் தற்போது துர்கா ஸ்டாலின் அணிந்துள்ள புடவை ரூ.1 கோடி மதிப்புடையது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவர் ஒரு கோடியில் அணிந்தாரா, 10 கோடியில் அணிந்தாரா என்பது பற்றிய ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. கொரோனா நிவாரண நிதி வசூலில் இருந்து இந்த புடவையை அவர் வாங்கியுள்ளார் என்று பகிர்ந்திருந்தது பற்றி மட்டுமே ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படம் முகேஷ் அம்பானி சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய இல்ல திருமணத்துக்கு நேரில் அழைப்பு விடுத்த போது எடுக்கப்பட்ட படம். அப்போது மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக இல்லை. மேலும், அப்போது கோவிட் 19 – கொரோனாவும் இல்லை. இதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: indiatimes.com I Archive
இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த புகைப்படத்தைப் பல முன்னணி ஊடகங்களும் வெளியிட்டிருந்தது தெரிந்தது. எக்கனாமிக் டைம்ஸ் 2019 பிப்ரவரி 12ம் தேதி வெளியிட்டிருந்த செய்தியில், முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோர் சென்னைக்கு வந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது, முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணத்துக்கு அழைப்பு விடுத்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செய்தியில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த ட்வீட் பதிவும் இணைக்கப்பட்டிருந்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது.
கொரோனா தொற்று டிசம்பர் 2019ல் சீனாவின் வூஹானில் ஏற்பட்டது. டிசம்பர் 31, 2019ல் தான் அதிகாரப்பூர்வமாக வூஹானில் நிமோனியா பாதிப்பு போன்று சிலருக்கு ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. 2020 ஜனவரியில்தான் உலகுக்கு கொரோனா பற்றித் தெரியவந்தது. இந்த அடிப்படை தகவலை உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்றாலே காணலாம். அப்படி இருக்கும் போது, 2019 பிப்ரவரியில் கொரோனா நிவாரண நிதியை வசூலித்து அதில் முறைகேடு செய்து புடவை வாங்கினார் என்று கூறப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு முன்பு, கொரோனா தொற்று உலகில் பரவத் தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட படத்தை வைத்து, கொரோனா நிதி வசூலில் முறைகேடு செய்து துர்கா ஸ்டாலின் ரூ.1 கோடிக்கு புடவை வாங்கினார் என்று விஷமத்தனமாக வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கொரோனா வசூல் பணத்தில் புடவை வாங்கிய துர்கா ஸ்டாலின் என்று பரவும் விஷம பதிவு!
Fact Check By: Chendur PandianResult: False
