
பாகிஸ்தானிலிருந்து பிரிவதாக அறிவித்த பலுசிஸ்தானில் இந்திய தேசியக் கொடியுடன் ஊர்வலம் நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்திய கொடியுடன் “சாரே ஜஹான்சே அச்சா” என்ற பாடலின் இசையை இசைத்தபடி ஊர்வலமாக பலரும் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தானில் இருந்து பிரிந்த பலூச் சுகந்திரம் அடைந்ததாக அறிவித்து இந்திய கொடிகளுடன் ஊர்வலமாகச் சென்றனர் இதுதான் அகண்ட பாரதம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான் என்ற பகுதி தனியாக பிரிந்து தனிநாடாக அறிவித்துக் கொண்டதாகவும் அதைத் தொடர்ந்து இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி, இந்திய தேசபக்தி பாடலை இசைத்துக் கொண்டு அந்த பகுதி மக்கள் ஊர்வலமாக சென்றதாகவும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். வீடியோவை முழுவதும் பார்க்கும் போது, குஜராத்தி மொழியில் மோடி புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட்டிருந்தது. கடைகளின் பெயர்களும் கூட குஜராத்தி மொழியில் எழுதப்பட்டிருந்தது. பேனராவது மோடியின் மீது உள்ள பற்று காரணமாக வைத்திருந்தார்கள் என்று விளக்கம் கூறலாம்… ஆனால் கடையின் பெயரைக் கூடவா மாற்றியிருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.
வீடியோவில் இடம் பெற்ற டிரம்ஸ் இசைக் கருவியில் சைஃபி ஸ்கவுட் சூரத் (Saifee Scout Surat) என்று இருந்தது. பலூச் பகுதிக்கு இந்தியாவின் சூரத்திலிருந்து இசைக் கலைஞர்கள் சென்று ஊர்வலம் நடத்தியிருக்க வாய்ப்பே இல்லை. எனவே, இந்த வீடியோ இந்தியாவில் குஜராத்தில் நடந்ததாக இருக்கலாம்… அதை பாகிஸ்தானின் பலூச் பகுதியில் நடந்த பேரணி என்று தவறாகப் பகிர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் குஜராத்தின் சூரத்தில் மூவர்ணக் கொடி யாத்திரை நடந்ததாக பல பதிவுகள் நமக்குக் கிடைத்தன. செய்தி ஊடகங்களிலும் கூட இந்த வீடியோ வெளியாகி இருந்தது.
கூகுளில் Saifee Scout Surat என்று டைப் செய்து தேடிய போது, அந்த இசைக் குழுவின் பல வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போன்று சீருடையில் அவர்கள் இசைக் கருவிகளை இசைக்கும் பல வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. இவை எல்லாம் இந்த வீடியோ சூரத்தில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
குஜராத்தில் நடந்த ஊர்வலத்தின் வீடியோவை எடுத்து பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இந்திய தேசியக் கொடியுடன் ஊர்வலம் நடத்தப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பலுசிஸ்தானில் இந்திய கொடியுடன் ஊர்வலம் நடத்தப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
