
வாக்குத் திருட்டுக்கு எதிராக பீகார் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
போலீஸ் வாகனத்தின் மீது மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#VoteChori வாக்கு திருட்டுக்கு எதிராக பீகார் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் பாசிச பிஜேபி ஆட்சிக்கு விரைவில் முடிவு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் மக்கள் போராட்டம் நடத்திய போது போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அக்டோபர் 12ம் தேதியில் இருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அதாவது, பீகார் தேர்தல் முடிவுகள் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்ததைக் கண்டறிந்தோம்.
தெளிவான அந்த வீடியோவில் போலீஸ் வாகனத்தில் குஜராத் பதிவு எண் இருந்தது. குஜராத்தி மொழியில் வெளியான பதிவுகளும் நமக்கு கிடைத்தன. அவற்றில், குஜராத்தில் தடையை மீறி ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்திருந்த விவசாயிகள் கூட்டத்தைக் கலைக்க போலீஸ் சென்ற போது மோதல் ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து தேடிய போது டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தது. அதில், குஜராத்தின் போட்டாத் (Botad) மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும், இந்த தாக்குதல் சம்பவத்தில் காவலர்கள் காயம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் குஜராத்தில் ஆம் ஆத்மி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தைக் கலைக்கச் சென்ற போலீஸ் மீது மக்கள் தாக்குதல் நடத்திய வீடியோவை தவறாக, தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பீகார் மக்கள் போராட்டம் நடத்தியதாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
குஜராத்தில் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான பழைய வீடியோவை பீகாரில் வாக்குத் திருட்டுக்கு எதிராக போராடிய மக்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:வாக்குத் திருட்டுக்கு எதிராக பீகாரில் போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


