அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் ராமர் சிலையைப் பார்த்து கண்ணீர் சிந்திய கேமரா மேன் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ராமர் சிலையை பார்த்து காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் கேமராமேன் கண்ணீர் சிந்துவது போன்று படங்கள் ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 23ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "சங்கராச்சாரியர் ஆன்மீகப் பெரியவர் புரிந்துகொள்ள முடிகிறது..! ஆனால் அந்த கேமராமேன் ? தாரை தாரையாக வழிகிறதே... நாம மட்டுந்தான்னு நெனச்சேன்.. ஊரே அழுதிருக்கு.. எல்லோரையும் அழவைத்துவிட்டான் அந்தச் சிறுவன்.. #ஜெய்ஸ்ரீராம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்று பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் ராமர் சிலையை திறந்த போது அதை கண்ட புகைப்பட கலைஞர் கண்ணீர் கசிந்ததாக சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்பட கலைஞர் புகைப்படம் பல ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இந்த புகைப்படம் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்ய, ஆதாரங்களைத் தேடினோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி அவுட் ஆனபோது கேமராமேன் கண்ணீர் சிந்தினார் என்று 2019ம் ஆண்டு சமூக ஊடகங்களில் வதந்தி பரவியபோது வெளியான சில கட்டுரைகள் கிடைத்தன. அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு நம்முடைய தேடுதலைத் தொடர்ந்தோம்.

Archive

அப்போது, ஆசியக் கால்பந்து போட்டியில் 16வது சுற்றில் ஈராக் அணி புகைப்பட கலைஞர் கண்ணீர் சிந்தினார் என்று 2019 ஜனவரி 24ம் தேதி இந்த புகைப்படத்தை அசிய கோப்பை ட்விட்டர் (எக்ஸ் தளம்) பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

Archive

அதே போன்று இவரது படத்தை ஈராக் கால்பந்து அணியும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் 2019 ஜனவரி 24ம் தேதி பதிவிட்டிருந்தது. அது மட்டுமின்றி சில ஊடகங்களிலும் கூட இந்த புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியிட்டிருப்பது நமக்குக் கிடைத்தது. இந்த புகைப்பட கலைஞரின் பெயர் முகமது அல் அஸ்ஸாவி (Muhammad Al-Azzawi) என்றும், ஈராக் அணி தோல்வியடைந்தபோது அதை தாங்க முடியாமல் கண்ணீர் சிந்தினார் என்றும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நம்முடைய ஆய்வில் இந்த புகைப்பட கலைஞர் புகைப்படம் 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈராக் கால்பந்து அணி தோல்வி அடைந்ததை தாங்க முடியாமல் அவர் கண்ணீர் சிந்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பைக் கண்டு புகைப்படக் கலைஞர் கண்ணீர் சிந்தினார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஈராக் நாட்டைச் சார்ந்த புகைப்பட கலைஞர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஈராக் தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் கண்ணீர் விட்ட படத்தை ராமர் சிலையை பார்த்து கண்ணீர் சிந்திய புகைப்படக் கலைஞர் என்று தவறாக பகிர்ந்திருப்பதைதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அயோத்தி ராமர் சிலையைப் பார்த்து கண்ணீர் சிந்திய புகைப்பட கலைஞர் என்று பரவும் தகவல் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False