
சங்கிகளுக்கு தேசப்பற்று இல்லை, தேசிய கீதம் கூட பாடத் தெரியாமல் திணறுகின்றனர் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
காவி நிற மேல் ஆடை அணிந்த ஒருவர் கொடியை ஏற்றிவிட்டு தேசிய கீதத்தைத் தப்புத் தப்பாகப் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் “தேசப்பற்று சங்கிகள்” என்று எழுதப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “சங்கி: உங்களுக்கு தேசபற்றே இல்ல தேசியகீதம் கூட பாட மாட்டேன் சொல்றீங்க
மீ: உனக்குத்தான் நிறைய தேசபக்தி இருக்குல்ல எங்க தேசியகீதத்த பாடு பாக்கலாம்
சங்கி: 🤡” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
உண்மை அறிவோம்:
2025ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பேசத் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாடப்படாததால் ஆளுநர் உரையை வாசிக்காமலேயே ஆர்.என்.ரவி வெளியேறினார்.
தமிழ்நாட்டில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் கூட்டம், முடிவில் தேசிய கீதத்துடன் நிறைவடையும் என்பது மரபு. ஆனால், அந்த மரபை மாற்ற வேண்டும் என்று கூறி ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார். இந்த சூழலில் சங்கிகள் என்று கொச்சையாக சொல்லப்படும் பா.ஜ.க, சங் பரிவார் அமைப்பினருக்கு தேசிய கீதம் கூட தெரியாது என்று தி.மு.க ஆதரவு சமூக ஊடகத்தினர் சமூக ஊடகங்களில் வீடியோக்களை பரப்பி வருகின்றனர். சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் தேசிய கீதத்தைத் தப்பும் தவறுமாகப் பாடிய வீடியோவுடன் மற்றொரு வீடியோவையும் வைரலாக பதிவிட்டு வருகின்றனர்.
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
சமாஜ்வாடி கட்சியினர் வீடியோ தொடர்பாக ஏற்கனவே ஃபேக்ட் செக் செய்திருந்ததால் மற்றொரு வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த வீடியோ பீகார் மாநிலத்தைச் சார்ந்தது என்பது தெரியவந்தது.
உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive
பீகார் மாநிலத்தின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சார்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் மேவாலால் சவுதிரி (Mewalal Chaudhary) என்று தெரியவந்தது. இவர் மூன்று நாட்கள் மட்டுமே அமைச்சராக இருந்துள்ளார். இவர் மீது இருந்த பல்வேறு குற்றச்சாட்டுக் காரணமாக பதவியேற்ற மூன்றாவது நாளிலேயே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்றும் செய்திகள் கிடைத்தன. மேலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவையும் கூட அவர் அமைச்சராக பொறுப்பேற்ற போது தேசிய கீதம் கூட தெரியாதவருக்குக் கல்வி அமைச்சர் பதவி என்று எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் அதன் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோதான்.
தற்போது இவர் உயிருடன் இல்லை. ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-வாக 2021 ஏப்ரல் 19ம் தேதி அவர் உயிரிழந்ததாக செய்திகள் கிடைத்தன. ஐக்கிய ஜனதா தளம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால், அது சங் பரிவார் அமைப்புகளுள் ஒன்று அல்ல. ஐக்கிய ஜனதா தளம் இந்தியா கூட்டணியிலும் இருந்துள்ளது. 2015ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சியானது லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் தான் முதன் முறையாக மேவாலால் சவுதிரி எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றிருந்தார். எனவே, அதை சங்கி அமைப்பு என்று கூற முடியாது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஐக்கிய ஜனதா தளத்தைச் சார்ந்தவர் தேசிய கீதத்தை தவறாக பாடிய வீடியோவை சங் பரிவார் அமைப்பைச் சார்ந்தவர் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:தேசிய கீதம் பாட முடியாமல் திணறிய சங் பரிவார் நிர்வாகி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
