பாஜக அலுவலகத்தில் குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலைதான் என்று கருக்கா வினோத் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலைதான் என்று கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அண்ணாமலை மற்றும் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் ஆகியோர் படங்களை ஒன்றாக வைத்து ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான். பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான். இருவருக்கும் இடையேயான தொலைபேசி அழைப்பு பதிவை போலீசாரிடம் ஒப்படைத்தார் கருக்கா வினோத். தேர்தலுக்காக வீசியதாக வாக்குமூலம்” என்று இருந்தது.

இந்த பதிவை Uthayakumar Uthayakumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 11ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் பாஜக பிரமுகர் கராத்தே தியாகராஜனின் டிரைவர் என்று முதலில் வதந்தி பரப்பப்பட்டது. தற்போது, பெட்ரோல் குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலைதான் என்று கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்ததாக நியூஸ் கார்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் கருக்கா வினோத் ஏதேனும் வாக்குமூலம் அளித்தானா அது தொடர்பாக செய்தி உள்ளதா என்று பார்த்தோம். கருக்கா வினோத் கூலிக்கு பெட்ரோல் குண்டுகளை வீசும் நபர் என்றும், தற்போது நீட் விவகாரம் தொடர்பாக வீசினேன் என்று வாக்குமூலம் அளித்ததாக செய்தி கிடைத்தது. வேறு எந்த தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை. விசாரணை நடப்பதால் இது பற்றி எதுவும் கூற முடியாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஏபிபி நாடு ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. மேலும், வழக்கமாக அவர்கள் பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட், வடிவமைப்பு எதுவும் இந்த நியூஸ் கார்டுடன் ஒத்துப்போகவில்லை.

எனவே, ஏபிபி நாடு ஆசிரியர் மனோஜைத் தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர், “அண்ணாமலை தொடர்பாக பிப்ரவரி 10ம் தேதி நியூஸ் கார்டுகளை வெளியிட்டிருந்தோம். எதை எடுத்து எடிட் செய்து, தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்துள்ளனர். இது போலியான நியூஸ் கார்டு” என்று கூறினார். இதன் அடிப்படையில், பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலைதான் என்று கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்ததாக பகிரப்படும் நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அண்ணாமலை கூறிதான பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜக அலுவலகத்தில் குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலைதான் என்று கருக்கா வினோத் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False