பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி ரூ.22.54 என நாணயம் விகடன் வெளியிட்ட தகவல் உண்மையா?
பெட்ரோல் மீது மத்திய அரசு ரூ.22.54 வரி விதிப்பதாக நாணயம் விகடன் நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பெட்ரோல், டீசல் - மத்திய மாநில அரசின் வரி மற்றும் பங்கீடு என்று நாணயம் விகடன் வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பெட்ரோல் மீதான வரிகள் தொடர்பான பகுதியில் மத்திய அரசின் வரி 22.54 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Sunil Rajendran என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 30ம் தேதி பதிவிட்டுள்ளார். நிலைத் தகவலில், "பெட்ரோல் விலை ஏறினால் மத்திய அரசு மற்றும் தான் காரணம் என்று பிதற்றும் ****** சமர்ப்பணம்..!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பெட்ரோல், டீசல் மீது மத்திய - மாநில அரசுகள் அதிக அளவில் வரி விதித்துள்ளன. மாநில அரசுகளைக் காட்டிலும் மத்திய அரசின் வரி சற்று அதிகமாக உள்ளது. ஆனால், பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள்தான் காரணம் என்ற வகையில் ஆளும் பா.ஜ.க-வினரால் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு வரி வசூலிப்பதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் நாணயம் விகடன் வெளியிட்டது போன்று பலரும் அதை பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
விகடன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதைப் போன்று நியூஸ் கார்டு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு வசூலிக்கும் வரி என ரூ.27.90 என குறிப்பிட்டிருந்தனர். எனவே, நாணயம் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதை உறுதி செய்துகொள்ள அதன் இதர ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் பார்வையிட்டோம். எல்லாவற்றிலும் மத்திய அரசு வரி ரூ.27.90 என இருந்தது. நாணயம் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வாகர் ஒருவர் ஏன் முன்பு போட்ட பதிவை நீக்கிவிட்டீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மற்றொரு வாசகர் முன்பு மத்திய அரசு வரி 22.54 என தவறாக குறிப்பிட்டிருந்தனர் என பதில் அளித்திருந்தார்.
தொடர்ந்து தேடிய போது, நாணயம் விகடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மத்திய அரசு வசூலிக்கும் வரி என ரூ.22.54 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது இல்லை, தவறான தகவல் கொண்டது என்பது தெளிவானது. நாணயம் விகடன் தரப்பில், முதலில் தவறாக தகவலுடன் நியூஸ் கார்டை உருவாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். அதன் பிறகு உண்மை தெரியவே, அதை எடிட் செய்து மாற்றியிருக்கிறார்கள். ஆனால், இஸ்டாகிராம் பக்கத்தில் மாற்றாமல் விட்டுவிட்டனர்.
உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive
ஆனால், முதலில் வெளியிட்ட தவறான தகவல் கொண்ட நியூஸ் கார்டை உண்மை என்று நம்பி பா.ஜ.க ஆதரவாளர்கள் பகிர்ந்து வருவது தெரிந்தது. இந்த நியூஸ் கார்டை பயன்படுத்தி அவதூறான வார்த்தைகளில் மாநில அரசுகளை பா.ஜ.க-வினர் விமர்சித்து வருகின்றனர்.
உண்மைப் பதிவைக் காண: ppac.gov.in
மத்திய அரசு எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை ஆய்வு செய்தோம். கலால்வரி, சாலை மேம்பாட்டு செஸ், விவசாய செஸ் என அனைத்தும் சேர்த்து ரூ.27.9 என்ற அளவில் வசூலிக்கப்படுகிறது என்று தகவல் கிடைத்தது. தமிழ்நாடு அரசு 13 சதவிகிதத்துடன் நிலைக் கட்டணமாக ரூ. 11.52 வசூலிக்கிறது. பெட்ரோலிய நிறுவனங்கள் மத்திய அரசு வரியுடன் சேர்த்து விற்கும் பெட்ரோல் மீது இந்த வரி விதிக்கப்படுகிறது. தற்போதைய அடிப்படை விலை அடிப்படையில் 22.9 என்ற அளவில் தமிழ்நாடு அரசு வரி இருக்கிறது. பா.ஜ.க ஆட்சி செய்யும் கார்நாடகாவிலும், மற்ற கட்சிகள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பெட்ரோல் மீதான வரி அதிகமாக இருப்பதை அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது.
உண்மைப் பதிவைக் காண: mycarhelpline.com I Archive
நம்முடைய ஆய்வில், நாணயம் விகடன் வெளியிட்ட தவறான நியூஸ் கார்டை உண்மை என்று நம்பி, பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகளே காரணம் என்ற வகையில் சமூக ஊடகவாசிகள் தகவல் பரப்பி வருவது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பெட்ரோல் மீது மத்திய மற்றும் தமிழ்நாடு அரசு விதிக்கும் வரிகள் மூலம் முறையே 22.54 ரூபாய் பெறுகின்றன என நாணயம் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டு தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி ரூ.22.54 என நாணயம் விகடன் வெளியிட்ட தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False