
ஆவின் நிறுவனம் தீபாவளி உள்ளிட்ட இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஆவின் பால் நிறுவனம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியிட்ட பால் பாக்கெட் கவர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” நேற்று #ஆவின் பாலில் வந்த கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்#. அரசாங்கமே மறைமுக மதப் பிரச்சாரத்தை செய்கிறதா?????????இதுபோன்று தீபாவளிக்கு ஏன் ஆவின் பாலில் வாழ்த்து வரவில்லை.இதுதான் மதச்சார்பற்ற அரசா …..!!!!!!! வெளியேறு வெளியேறு.! இந்து அறநிலையத்துறையைவிட்டு வெளியேறு.! ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Jotho Sahadevan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 டிசம்பர் 26ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆவின் பால் நிறுவனம் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்குப் பால் உறையில் வாழ்த்து வெளியிடுவது வழக்கம். ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மட்டுமே வாழ்த்து தெரிவித்தது போல பலரும் சமூக ஊடகங்களில் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
முதலில், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதுதான் ஆவின் பால் நிறுவனம் வாழ்த்து வெளியிட்டதா என்று பார்த்தோம். 2019ம் ஆண்டில் அப்போது பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி வெளியிட்டிருந்த ட்வீட் கிடைத்தது. அதிலும் பால் உறையில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான எஸ்.ஜி.சூர்யா 2016ம் ஆண்டிலேயே ஆவின் பால் பாக்கெட் உறையில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்ததற்கு எதிர்ப்பை பதிவு செய்திருந்ததையும் காண முடிந்தது. இதன் மூலம் ஆவின் புதிதாக கிறிஸ்துமஸ் வாழ்த்து வெளியிடவில்லை, இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் விஷயம் என்பது உறுதியானது. மேலும், 2016ம் ஆண்டிலிருந்தே பா.ஜ.க-வினர் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதை எதிர்த்திருப்பதும் காண முடிந்தது.
அடுத்ததாக 2021 தீபாவளி பண்டிகைக்கு ஆவின் வெளியிட்ட வாழ்த்து தொடர்பான படங்களைத் தேடினோம். Aavin Singanallur என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2021 நவம்பர் 3ம் தேதி வெளியான பதிவு கிடைத்தது. அதில் ஆவின் பால் பாக்கெட்களில் தீபாவளி வாழ்த்து வெளியாகி இருந்தது. “தீபங்களின் ஒளி இல்லத்தில் பரவட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று அதிலிருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook
அதே போன்று தீபாவளி பண்டிகைக்கு ஆவின் ஆவது வாழ்த்து கூறியதே என்று கடந்த தீபாவளியின் போது பலரும் ஆவின் வெளியிட்ட பால் பாக்கெட்டின் புகைப்படத்தை சமூக ஊகடங்களில் பகிர்ந்து வந்திருப்பதையும் காண முடிந்தது. இதன் மூலம் தீபாவளி பண்டிகைக்கு ஆவின் வாழ்த்து தெரிவித்திருப்பது உறுதியாகிறது.
தொடர்ந்து தேடிய போது ரம்ஜான் பண்டிகையின் போது ஆவின் வெளியிட்ட வாழ்த்தும் நமக்குக் கிடைத்தது. இப்படி ஆவின் எல்லா பண்டிகைக்கும் வாழ்த்து வெளியிட்டு வருகிறது. ஆனால், குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் கிறிஸ்மஸ், ரம்ஜான் பண்டிகையின் போது வெளியிடப்படும் வாழ்த்துகளை வைத்துக்கொண்டு விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதைக் காண முடிந்தது.
நம்முடைய ஆய்வில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மட்டுமின்றி தீபாவளி, பொங்கல், ரம்ஜான் என அனைத்து மதத்தினர் பண்டிகைக்கும் ஆவின் பால் நிறுவனம் பால் உறையில் வாழ்த்துகளை வெளியிட்டு வந்துள்ளதை உறுதி செய்துள்ளோம். இதன் மூலம் ஆவின் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறாமல் கிறிஸ்மசுக்கு மட்டும் வாழ்த்து கூறியது என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இந்து பண்டிகைகளை புறக்கணித்துவிட்டு கிறிஸ்துமஸ்க்கு மட்டும் ஆவின் பால் நிறுவனம் வாழ்த்து வெளியிட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தீபாவளியைப் புறக்கணித்து கிறிஸ்துமஸ்க்கு மட்டும் வாழ்த்து கூறியதா ஆவின்?
Fact Check By: Chendur PandianResult: False
