
தமிழ்நாட்டில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டார் என்றும், தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்றும் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive
பேருந்து ஓட்டுநர் ஒருவரை இளைஞர் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியா திமுக ஆட்சியில் மிக மோசமான நிலையில் தமிழகத்தின் சட்டம் ஓழுக்கு சீர் கெட்டுவிட்டது. That அரசு ஊழியர்கள் என்றுமே திமுக பக்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Kapil என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 டிசம்பர் 26ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பேருந்து ஓட்டுநரை இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்குகிறார். நடத்துநர் அதைத் தடுக்க முயற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். பின்னணியில் இசை சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் பேசுவது என்ன என்று கேட்க முடியவில்லை. இவர்கள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் போல இல்லை.
தமிழ்நாட்டில் இந்த சம்பவம் நடந்தது என்பதற்கு வீடியோவில் எந்த நம்பகமான விஷயமும் நமக்குக் கிடைக்கவில்லை. வேறு சில வீடியோக்களில் தாக்குதல் நடத்தப்பட்ட போது பதிவான ஆடியோ இருந்தது. ஆனால், அவையும் தெளிவாக இல்லை. எனவே, உண்மையில் இந்த வீடியோ தமிழ்நாட்டில், தற்போது நடந்ததுதானா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2018ம் ஆண்டிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. மேலும், கேரளாவில் இந்த சம்பவம் நடந்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடிய போது, 2018ம் ஆண்டு கேரளாவில் பாலக்காடு அருகே திருமண விழாவுக்கு சென்ற வாகனத்தின் மீது அரசுப் போக்குவரத்து கழக பேருந்து லேசாக இடித்துள்ளது. இதனால் திருமணத்துக்குச் சென்ற இளைஞர்கள் மூன்று பேர் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கினர். இதில் அரசு பேருந்து ஓட்டுநர் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அரசு பேருந்து ஓட்டுநர் அளித்த புகார் அடிப்படையில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என்று இருந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக 2018ம் ஆண்டில் வெளியான பல்வேறு செய்திகள், வீடியோக்கள் நமக்கு கிடைத்துள்ளன.
அசல் பதிவைக் காண: indiatoday.in I Archive
தமிழ்நாடு காவல் துறையும் இந்த வீடியோ 2018ம் ஆண்டு கேரளாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அசல் பதிவைக் காண: Facebook
இதன் மூலம் 2018ம் ஆண்டு கேரளாவில் நிகழ்ந்த சம்பவத்தின் வீடியோவை எடுத்து வந்து தற்போது 2021 டிசம்பரில் தமிழ்நாட்டில் நடந்தது போன்று தவறான தகவலைப் பரப்பியிருப்பது உறுதியானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தி.மு.க ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஸ்டாலின் ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டதாக பகிரப்படும் வீடியோ 2018ம் ஆண்டு கேரளாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:FACT CHECK: தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டார் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
