
‘’ இந்து கோயில் பூசாரியை கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் முஸ்லீம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு ட்விட்டர் வழியே (@FactCheckTamil) அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார்.
பலரும் இந்த பதிவை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Claim Tweet Link l Archived Link
உண்மை அறிவோம்:
இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து ரிவஸ் இமேஜ் முறையில் தகவல் தேடினோம். அப்போது, இதுபற்றி ட்விட்டரில் பகிரப்பட்ட பதிவு ஒன்றை கண்டோம்.
மேற்கண்ட ட்விட்டர் பதிவில் இது ஜாதி ரீதியான மோதல் என்று குறிப்பிட்டதைக் காணலாம். இந்து, முஸ்லீம் மோதல் என்று எங்கேயும் இதில் குறிப்பிடப்படவில்லை.

இதன்பேரில், ஹரியானா மாநிலத்தில் இப்படி ஏதேனும் சம்பவம் நிகழ்ந்ததா என்று விவரம் தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டில், Dhabikalan – Fatehabad, Haryana என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக, தெரியவந்தது. மேலும், இதுபற்றி கள ஆய்வு மேற்கொண்ட Falana Dikhana என்ற ஊடகம், அந்த பூசாரியை தாக்கிய இளைஞர்களை விசாரித்துள்ளது. அதற்கு அவர்கள், ‘பெண்களிடம் தவறாகப் பேசி பழக முயன்றதால், அந்த நபரை தாக்க நேரிட்டதாக,’ கூறியிருக்கின்றனர்.

அதேசமயம், அந்த ஊர் தலைவர் பேசுகையில், ‘குறிப்பிட்ட பூசாரி பணிபுரியும் கோயிலில், இந்த இளைஞர்கள் அவ்வப்போது சென்று கிரிக்கெட் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை பதுக்கி வைப்பது வழக்கம். இது தவிர, சில சட்டவிரோதமான பொருட்களையும் கோயில் லாக்கரில் இவர்கள் வைத்து எடுப்பதாக, பூசாரிக்கு சந்தேகம் வந்துள்ளது. அதன்பேரில், சண்டையிட்டுள்ளார். இதற்கு பழிவாங்கும் வகையில், பூசாரியை கடத்திச் சென்று, இளைஞர்கள் இவ்வாறு தாக்கியுள்ளனர்,’ என்று கூறியதாக, Falana Dikhana குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து, இதுபற்றி தகவல் தேடுகையில், போலீசார், குறிப்பிட்ட இளைஞர்களை அப்போதே கைது செய்து, நடவடிக்கை எடுத்திருப்பதாக, தெரியவந்தது.

அடுத்தப்படியாக, நாம் இதுபற்றி Bhattu Kalan (Bhattu Thana Police ) போலீசாரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம்.

நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், ‘’இந்த சம்பவம் 2020ம் ஆண்டு நடைபெற்றதாகும். குறிப்பிட்ட பூசாரி பணிபுரியும் கோயில் வளாகத்தில் உள்ளூர் இளைஞர்கள் சிலர் அவ்வப்போது அத்துமீறி செயல்பட்டதால், அவர் கண்டித்துள்ளார். இதனால், இரு தரப்பிற்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, இவ்வாறு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதுபற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதேசமயம், இளம்பெண்களிடம் தகாத முறையில் நடக்க முயன்றதால் அடித்ததாக, இளைஞர்கள் தெரிவித்தனர். எனினும், அவர்களை அப்போதே கைது செய்து, வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் இந்து முஸ்லீம் பிரிவினை விதைப்பது ஏற்புடையதல்ல,’’ என்றனர்.
இதுதொடர்பாக, 03.11.2020 தேதியிட்ட FIR நகல் இணைப்பையும் நமக்கு அளித்தனர். அதில், குற்றவாளிகள் பெயரை பார்த்தபோது, முஸ்லீம் யாரும் இல்லை, என்று தெரியவந்தது.

எனவே, ஹரியானா மாநிலத்தில் 2020ம் ஆண்டு நிகழ்ந்த தனிப்பட்ட விரோதம் தொடர்பான தாக்குதல் நிகழ்வை தற்போது எடுத்து, ‘இந்து – முஸ்லீம் பிரிவினை’ என்ற கோணத்தில் சிலர் வேண்டுமென்றே பகிர்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:இந்து பூசாரியை கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் முஸ்லீம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
