வந்தே பாரத் ரயிலை இயக்கும் பெண்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

வந்தே பாரத் ரயிலை இயக்கும் பெண்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் போன்று ஆடை அணிந்திருக்கும் இரண்டு பெண்கள் ஏறும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “NaMoAgain2024 🌷 #BJP4IND வந்தே பாரத் ரயில் லோகோ பைலட் குழு! இந்த அற்புதமான காட்சியை நீங்கள் கற்பனை செய்திருக்க முடியுமா? நிலக்கரி என்ஜின் டிரைவர்கள் முதல் இந்த ஏர்லைன் ஸ்டைல் ​​இன்ஜின் பைலட் வரை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Prabhu Manoharan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 அக்டோபர் 2ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

வந்தே பாரத் ரயில் இன்ஜினை இயக்கும் பெண்கள் என்று குறிப்பிட்டு வீடியோவை பதிவிட்டுள்ளனர். அவர்களைப் பார்க்கையில் ரயில் லோகோ பைலட் போல இல்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்து இவர்கள் யார் என்று பார்த்தோம்.

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலம் உள்பட பல ஃபேக்ட் செக் ஊடகங்கள் இந்த வீடியோவை ஃபேக்ட் செக் செய்திருப்பது தெரிந்தது. அந்த ஃபேக்ட் செக் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டு, நம்முடைய ஆய்வைத் தொடர்ந்தோம்.

பலரும் வந்தே பாரத் ரயிலின் லோகோ பைலட் என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். இவற்றுக்கு இடையே இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று கிடைத்தது. டிராவலிங் டிடிஇ (travelling_tte) என்ற அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிடிஇ (ரயில் டிக்கெட் பரிசோதகர்கள்) என்று குறிப்பிட்டுப் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் வேறு எந்த தகவலும் இல்லை. எனவே, தொடர்ந்து வந்தே பாரத், பெண் டிக்கெட் பரிசோதகர் என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: Instagram

அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படத்துடன் வெளியான செய்தி ஒன்று நமக்கு கிடைத்தது. தடகள முன்னாள் வீராங்கனை பத்மினி தாமஸ் அந்த ரயிலில் பயணித்ததாகவும் அவரது டிக்கெட்டை டயானா ஜான் செல்வன் வாங்கி பரிசோதித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த காட்சிகளை ஊடகங்கள் பதிவு செய்தன என்றும், டிக்கெட் பரிசோதகர் வேறு யாருமில்லை பத்மினி தாமஸின் மகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. டயானாவும் தடகள வீராங்கனை என்றும், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு டயானா ரயில்வே துறையில் இணைந்தார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: keralakaumudi.com I Archive

யூடியூபில் பத்மினி தாமஸ், டயானா ஜான் செல்வன் என்று டைப் செய்து தேடிய போது, டயானா ஜான் செல்வன் சீட்டு பரிசோதகர்களாக பணியாற்றும் வீடியோக்களும் கிடைத்தன. அதில் ஒருவர், நீங்கள் டிக்கெட் பரிசோதகர் தானே என்று கேட்க, ஆம் நான் டிக்கெட் பரிசோதகர். என்னுடைய பெயர் டயானா என்று அவர் கூறுகிறார். அந்த வீடியோவில் உயரமான பெண்ணும் இருக்கிறார். அவர்களை எல்லாம் வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் பரிசோதகர் என்று ஒருவர் அறிமுகம் செய்கிறார். 

இதன் மூலம் வந்தேபாரத் ரயில் டிக்கெட் பரிசோதகர்களை, வந்தே பாரத் ரயிலின் லோகோ பைலட் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. 

மேலும், வந்தே பாரத் ரயிலை பெண்கள் ஓட்டவில்லை என்று கூறவில்லை. சுரேக்கா யாதவ் என்ற பெண் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் லோகோ பைலட் என்று பெயர் பெற்றுள்ளார். 

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் உள்ள பெண்கள் வந்தே பாரத் ரயிலின் லோகோ பைலட் இல்லை; அவர்கள் வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் பரிசோதகர்கள் என்று மட்டுமே உறுதி செய்துள்ளோம்.

முடிவு:

வந்தே பாரத் ரயிலின் பெண் ஓட்டுநர்கள் என்று பகிரப்படும் வீடியோவில் இருப்பவர்கள் ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வந்தே பாரத் ரயிலை இயக்கும் பெண்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: Missing Context