
‘’நாசா வியந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Leo Vimal ஜூன் 23,2019 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், ‘’சேட்டிலைட் மூலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வடிவம் வட்டமாக இருப்பதை பார்த்து ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானி கெப்ளர் அதிர்ச்சி அடைந்தார். இதனை நேரில் வந்து அவரே ஆய்வு செய்தபோது, கோயில் சதுரமாக உள்ளது. ஆனால், அதன் மொட்டை கோபுரம் காரணமாக, வட்ட வடிவில் சேட்டிலைட்டில் தோன்றுவதாக, கெப்ளர் அறிந்தார். இத்தகைய கட்டுமான ரகசியத்தை அறிந்து, நாசா அதிர்ச்சி அடைந்தது,’’ என்று நீளமான ஒரு கதையை எழுதியுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேலே குறிப்பிடப்படும் செய்தி உண்மையா என அறிந்துகொள்வதற்காக, கூகுளில் தகவல் தேடினோம். அப்போது தினமலர் இணையதளம் வெளியிட்ட செய்தி ஒன்றின் விவரம் கிடைத்தது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link
வேறு யாருமே இந்த செய்தியை வெளியிடாத நிலையில், தினமலர் இதனை பகிர்ந்துள்ளது வியப்பாக இருந்தது. இதனை ஒருமுறை படித்தாலே நன்கு புரியும். அதாவது இதில் உள்ளது மிக வேடிக்கையான விசயமாகும். சேட்டிலைட்டில் பார்த்தால் கோயில் வட்டமாக தெரிகிறது என்றும், இதற்கு கோயிலின் மொட்டை கோபுரமே காரணம் எனவும் கூறியுள்ளனர். இதுபுரியாமல் இதனை உண்மை என நினைத்து, தினமலர் இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதையடுத்து, ஃபேஸ்புக்கில் யாரேனும் இப்படி தகவல் பகிர்ந்துள்ளார்களா என விவரம் தேடினோம். அப்போது, பலர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்திருந்த நிலையில், வெகு சிலர் இது போலி தகவல் என்றும், நகைச்சுவை நடிகர் ஒருவர் எழுதிய ஃபேஸ்புக் பதிவை உண்மை என நினைத்து தினமலர் பகிர, அதனை மற்றவர்களும் காப்பி அடித்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அதாவது, வெங்கடேஷ் ஆறுமுகம் என்ற ஃபேஸ்புக் பதிவர், கடந்த மே, 31, 2019 அன்று ஒரு நகைச்சுவை பதிவை பகிர்ந்திருந்தார். அந்த பதிவை உண்மை என நம்பி, தினமலர் செய்தியாக வெளியிட, அதனை பலரும் அப்படியே காப்பி அடித்து பகிர்ந்து வருகின்றனர். அவரது ஃபேஸ்புக் பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவிலேயே, குறிப்பிட்ட நகைச்சுவை நடிகர் கமெண்டில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, இது ஒரு நகைச்சுவை பதிவு என்றும், இதுபோல பல வதந்தி பதிவுகளை நகைச்சுவைக்காக எழுதி வருகிறேன் என்றும், அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே, நகைச்சுவைக்காக இதனை வெங்கடேஷ் ஆறுமுகம் பகிர்ந்த விவரம் தெரியாமல் பலரும் உண்மை என நினைத்து பகிர்ந்து வருகிறார்கள் என்பது தெளிவாகிறது. இதில் வியப்பான விசயம் முன்னணி தமிழ் ஊடகமான தினமலர் இதனை செய்தியாகவே வெளியிட்டுள்ளது.
ஒரு தகவலை பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையை ஆராயும்படி நமது வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நாசா வியந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில்; ஃபேஸ்புக் வதந்தியால் சர்ச்சை
Fact Check By: Pankaj IyerResult: False
