
அறந்தாங்கி தொகுதியில் நாம் தமிழ் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் எனத் தந்தி டிவி மற்றும் மாலை முரசு டிவி கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளதாகக் கூறி சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
மாலை முரசு டி.வி-யின் இரண்டு நியூஸ் கார்டுகளை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் படம் இடம் பெற்றுள்ளது. தி.மு.க 40 சதவிகித வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 41 சதவிகித வாக்குகளையும், அதிமுக 4 சதவிகித வாக்குகளை வாங்கும் என்றும் அதிலிருந்தது.
நிலைத் தகவலில், “அறந்தாங்கி தொகுதியில் அடுத்த சம்பவம் தயாராகிவிட்டது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை சிவகாசி அய்யனார் என்பவர் 2021 மார்ச் 29 அன்று பதிவிட்டிருந்தார்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
Satheesh Sathaiah என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் உங்கள் தொகுதியில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு நாம் தமிழர் கட்சிக்கு 36 சதவிகிதம் பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 30 சதவிகிதம் பேரும், அதிமுக-வுக்கு 26 சதவிகிதம் பேரும் வாக்களிப்போம் என்று கூறியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இது போன்று அறந்தாங்கி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் என ஊடகங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இது வரை வெளியான கருத்துக் கணிப்புகள் எதிலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் என்று கூறவில்லை. அறந்தாங்கி தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க-வை விட அதிக சதவிகித ஆதரவை நாம் தமிழர் கட்சி பெற்றதாக குறிப்பிட்டுள்ளனர். அது கூட உண்மையாக இருக்கலாம். ஆனால், நாம் தமிழருக்கு 41 சதவிகித ஆதரவும் அதிமுக-வுக்கு வெறும் நான்கு சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்ததாகவும் கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
எனவே, மாலை முரசு டி.வி வெளியிட்ட கருத்துக் கணிப்பைத் தேடி எடுத்தோம். அதில், அ.தி.மு.க 40 சதவிகித வாக்குகளையும் தி.மு.க கூட்டணி 41 சதவிகித வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 3 சதவிகித வாக்குகளையும் வாங்கும் என்று குறிப்பிட்டிருந்தது தெரிந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து நாம் தமிழர் கட்சி வெற்றிபெறும் என மாலை முரசு கூறியதாக பதிவிட்டிருப்பது உறுதியானது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
அடுத்ததாக தந்தி டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பைத் தேடினோம். அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் 42 – 48 சதவிகித வாக்குகளையும், அ.தி.மு.க 40 – 46 சதவிகித வாக்குகளையும் நாம் தமிழர் 3 முதல் 6 சதவிகித வாக்குகளையும் வாங்கலாம் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டிருப்பது தெரிந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதன் மூலம் இரண்டாவது நியூஸ் கார்டும் தவறானது, எடிட் செய்யப்பட்டது என்று உறுதியானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அறந்தாங்கி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் எனத் தந்தி டிவி, மாலை முரசு டிவி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அறந்தாங்கி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அறந்தாங்கி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியானதா?
Fact Check By: Chendur PandianResult: Altered
