
தற்காலிக பஸ் ஓட்டுநர் ஓட்டி வந்த பஸ் கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அரசு பஸ் கவிழ்ந்து கிடக்கும் புகைப்படம் ஃபபேஸ்புக்கில் 2024 ஜனவரி 10ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற இடத்தில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தற்காலிக ஓட்டுனர் ஓட்டி வந்த அரசு பேருந்து ., கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயம் அடைந்ததாக தகவல்….” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர். இந்த நேரத்தில் தற்காலிக பணியாளர்கள் கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பஸ் கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்ட சூழலில், மணப்பாறை அருகே ஐந்து பேர் உயிரிழந்ததாக எந்த செய்தியும் இல்லை. லேசான விபத்தைக் கூட ஊடகங்கள் மிகப்பெரிய செய்தியாக வெளியிட்டு வரும் சூழலில், ஐந்து பேர் உயிரிழந்த செய்தி சாதாரண செய்தியாகக் கூட வராதது ஆச்சரியத்தை அளிக்கவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் 2023 ஜூன் மாதம் 25ம் தேதி தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டிருப்பது தெரிந்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடந்த விபத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: hindutamil.in I Archive
தினமலர் ஊடகம் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோவுடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் உள்ள பஸ் கவிழ்ந்து கிடப்பதைக் காண முடிந்தது. இந்த செய்தியை மேலும் பல ஊடகங்களும் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
சம்பவம் நடந்தது உண்மைதான்… ஆனால் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலம் மட்டும் தவறு. 2023 ஜூன் மாதம் நடந்த பழைய செய்தியை, அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடந்த 2024 ஜனவரி 2வது வாரத்தில் நடந்தது போலத் தவறாக பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.
முடிவு:
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர் ஓட்டிய பஸ் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தற்காலிக பஸ் ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் 5 பேர் பலி என்று பரவும் வதந்தி!
Written By: Chendur PandianResult: Missing Context
