பீகார் தேர்தலுக்காக கடத்தப்படும் மது பாட்டில் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தேசிய அளவில் I National

பீகார் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ரயிலில் பீகாருக்கு மது பாட்டில்கள் கடத்தப்படுகின்றன என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ரயில் பெட்டியின் ஏ.சி வரும் பகுதிக்குள் இருந்து மதுபான பாட்டில்களை எடுக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “ஏசி பெட்டியில் குளிர்ச்சி குறைவாக இருப்பதாக பயணிகள் புகார் அளித்ததை தொடர்ந்து ஏசி வரும் பாதையை ரயில்வே ஊழியர் பரிசோதனை செய்தபோது, உள்ளே இருந்து ஏராளமான மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. பீகாருக்கு இந்த மது பாட்டில்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது” என்பது பொன்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், “ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்று  டெக்னீசியன் ஓபன் செய்தபோது உள்ளே மது பாட்டில்கள் கடத்தல் அடைத்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. “தேர்தல் கும்மாளத்துக்காக ” சங்கி நாய்கள் ரயிலில் மது பாட்டில்கள் கடத்திச் செல்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் கும்மாளத்துக்காக சங்கிகள் மது பாட்டிலை கடத்திச் சென்றனர் என்று ஒரு வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு ரயில் பெட்டியில் ஏசி காற்று வரும் வழியில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது. அந்த செய்தியை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நடந்தது போன்று பகிர்ந்திருக்கிறார்களா என்ற சந்தேகத்தில் ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2025 ஆகஸ்ட் மாதம் (இரண்டு மாதங்களுக்கு முன்பு) இந்த வீடியோவுடன் செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. நாம் சந்தேகப்பட்டதுபோல கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான வீடியோவை இப்போது நடந்தது போன்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியானது.

2025 ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் இந்த மது பாட்டில் கடத்தல் தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது. அதில், உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவிலிருந்து பீகார் மாநிலத்தில் உள்ள பரவுனி (Barauni) என்ற ஊருக்கு சென்ற ரயிலில் ஏசி பெட்டியில் தட்பவெப்பநிலை குளிர்ச்சியாக இல்லை என்று ரயில்வேக்கு புகார் சென்றது. இதைத் தொடர்ந்து ஏ.சி டெக்னீஷியன் அந்த பெட்டிக்கு சென்று ஏ.சி காற்று வரவில்லை என்று புகார் எழுந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.

ஏ.சி வரும் பாதையிலிருந்த மூடியைத் திறந்தபோது உள்ளே ஏராளமான மது பாட்டில்கள் இருந்ததை அவர் கண்டறிந்தார். இது தொடர்பாக ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. மது பாட்டில்களைப் பதுக்கிக் கடத்தி வந்த ரயில் பெட்டி அட்டன்டர் அனிஷ் குமார் கைது செய்யப்பட்டார். பீகாரில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதிலிருந்து ரயிலில் மது பாட்டில்களைக் கடத்திச் சென்று இரண்டு மடங்கு லாபத்தில் அவர் விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: freepressjournal.in I Archive I timesofindia.indiatimes.com I Archive

கடத்தப்பட்டவர் பாஜக ஆதரவாளர் என்றோ, பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்த வாக்காளர்களைக் கவர்வதற்காக இவர் கடத்திச் சென்றார் என்றோ எந்த செய்தியும் இல்லை. பீகார் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக நடந்த சம்பவத்தின் வீடியோவை தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, 2025 ஆகஸ்ட் மாதம் நடந்த சம்பவத்தின் வீடியோவை இப்போது நடந்தது போன்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:பீகார் தேர்தலுக்காக கடத்தப்படும் மது பாட்டில் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False