FACT CHECK: திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது தவறில்லை என்று சீமான் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறு இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Facebook

சீமான் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை. திராவிடமா? ஆரியமா? என்றால் நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கமே நிற்கும் – சீமான்” என்று இருந்தது.

நிலைத் தகவலில், “உன்னை மேடையேற்றி பேசக் கற்றுக்கொடுத்தது திராவிடம்.

இனத்துரோகி இப்போது ஆரியன் காவில் விழுந்து கிடக்கும் முழு  சங்கியாக நிற்கிறாய்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Gomathy Bsr என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 செப்டம்பர் 14ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

திராவிடத்தை மிக கடுமையாக எதிர்த்து வருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த நிலையில் திராவிடத்தை வீழ்த்த, ஆரியத்துடன் கைக்கொள்வது தவறு இல்லை என்று கூறியது போன்று ஐபிசி தமிழ் என்ற ஊடகம் நியூஸ் கார்டு வெளியிட்டது போன்று தகவல் பகிரப்பட்டு வருகிறது. 

கடந்த செப்டம்பர் 12ம் தேதி சங்க காலம் தொட்டு… தமிழரா… திராவிடரா? என்ற தலைப்பில் இன விடுதலை அரசியலுக்கான முழு நாள் கருத்தரங்கம் சென்னை போரூரில் நடந்தது. அந்த கருத்தரங்கில் பேசிய படத்துடன் நியூஸ் கார்டு இருந்தது. 

திராவிடத்தை வீழ்த்த ஆரியத்துடன் கைகோக்க வேண்டும் என்று சீமான் பேசியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, அந்த கருத்தரங்கில் என்ன பேசினார் என்பதைத் தெரிந்துகொள்ள வீடியோவை தேடினோம். நான்கு மணி நேர வீடியோ ஒன்று யூடியூபில் கிடைத்தது. அதில் 8வது நிமிடத்தில் சீமான் பேசத் தொடங்குகிறார். முழுவதும் அவருடைய பேச்சு தான் இருந்தது. 

எனவே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைத் தொடர்புகொண்டு, சமூக ஊடகங்களில் பரவி வரும் நியூஸ் கார்டு பற்றி கேட்டோம். அப்போது அவர், “கருத்தரங்கில் நான் பேசிய வீடியோ உள்ளதே. அவற்றைக் கேட்டிருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். தவறான செய்தியைப் பரப்புகின்றனர். இப்படி ஒரு செய்தியை நான் பதிவு செய்யவே இல்லையே. இதைத்தான் திராவிட மோசடி என்கிறோம். இந்த வேலையைத்தான் செய்வார்கள். பேசியிருக்கிறேனா… பதிவு இருக்கிறதா?

இந்த மாதிரி கட்டுக்கதைகள், இந்த மாதிரி வேலையைச் செய்வதைத்தான் திராவிட திரிபு என்கிறோம். அந்த கருத்தரங்கின் நான் பேசியது முழுவதும் உள்ளது. அதைப் போட்டுப் பார்க்கலாம். நாங்கள் இந்த இரண்டையும் ஒன்றுதான் என்கிறோம். எங்களுக்கு ஆரியம் வேறு இந்தியம் வேறு என்று இல்லை. ஆரியம், திராவிடம் இரண்டையும் சம எதிரிகளாகப் பார்க்கிறோம். ஆரியத்தை எதிர்க்க வந்த திராவிடம் என்று இவர்களாக சொல்லிக்கொள்கிறார்கள். இன்றைக்கு அந்த கோட்பாட்டிலேயே இல்லையே இவர்கள். உளறுகின்றனர்… வாழ்வியல் என்கின்றனர், சாதியம் மறுப்பு என்கின்றனர், வாழ்க்கை முறை என்கின்றனர், மரபினம் என்கின்றனர். அப்படி எல்லாம் ஒரு செய்தியை நாங்கள் பதிவு செய்யவில்லை” என்றார்.

இதற்கிடையே ஐபிசி தமிழ் என்ற ஊடகம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று பதிவிட்டிருந்ததும் நமக்குக் கிடைத்தது.

Archive

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது தவறு இல்லை என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திராவிடத்தை வீழ்த்த ஆரியத்துடன் கைக்கொள்வது தவறு இல்லை என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது தவறில்லை என்று சீமான் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False