இலங்கையில் உல்லாசமாக இருந்த சுவாமி ஆனந்த் ஸ்வரூப் மகராஜ் சிக்கினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மொட்டை அடித்திருந்த நபர் ஒருவர் இரு பெண்களுடன் இருப்பதை சிலர் கண்டறிந்து தாக்கும் வீடியோ மற்றும் சாமியார் ஒருவர் பேசும் வீடியோவை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், "இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் என்று பேசிய சங்கராச்சார்ய பரிஷத் தலைவர் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் மகராஜ், இலங்கையில் விபச்சாரிகளுடன் உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரபல வட இந்திய சாமியார் இலங்கையில் உல்லாசமாக இருந்த போது பிடிபட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீடியோவில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட லோகோ உள்ளது. சிங்கள மொழியில் பேசுவதைக் கேட்க முடிகிறது. எனவே, இந்த சம்பவம் இலங்கையில் நடந்த ஏதோ ஒரு நிகழ்வின் வீடியோ என்பது தெளிவாகிறது. ஆனால் இரண்டு வீடியோவிலும் உள்ளது ஒரே நபர் போலத் தெரியவில்லை. இருவரும் மொட்டை அடித்துள்ளனர். அதைத் தவிர இருவருக்கும் வேறு உருவ ஒற்றுமை இருப்பது போல் தெரியவில்லை.

மேலும் அந்த வீடியோவிலேயே சில புகைப்படங்களையும் இணைத்திருந்தனர். அதில் அந்த நபர் புத்த பிட்சு போல இருக்கிறார். இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவின் கையில் கயிறு கட்டுவது போல உள்ளது. ஆனால், வட இந்திய சாமியாரோ காவி உடை உடுத்தி, நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்துள்ளார். இருவரும் வேறு வேறு நபர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் மகராஜ் வீடியோவை யூடியூபில் இருந்து தேடி எடுத்தோம். அந்த வீடியோ 2023 ஜூன் 22ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அடுத்ததாக உல்லாசத்தில் ஈடுபட்ட சாமியார் வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இலங்கை ஊடகங்கள் பலவற்றிலும் இந்த வீடியோ பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. எதிலும் இந்த நபர் இந்தியாவைச் சார்ந்த சாமியார் என்றோ, சுவாமி ஆனந்த் ஸ்வரூப் மகராஜ் என்றோ குறிப்பிடப்படவில்லை.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive

தொடர்ந்து தேடிய போது ராஜபக்சேவுக்கு நெருக்கமான புத்த பிக்கு சிக்கினார் என்று செய்திகள் வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பதிப்பில், "தாய் மகளுடன் தகாத உறவில் இருந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமான பிட்சு" என்று தலைப்பிட்டு 2023 ஜூலை 9ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தனர்.

மேலும் புத்த பிக்கு மற்றும் இரண்டு பெண்களைத் தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அந்நாட்டு அமைச்சர் உத்தரவிட்ட செய்தியும், அதைத் தொடர்ந்த இந்த சம்பவம் தொடர்பாக பலரை போலீசார் கைது செய்த செய்தியும் நமக்குக் கிடைத்தது. மேலும் இதே வீடியோவை வட இந்திய சாமியார் என்று பெயரைக் குறிப்பிடாமல் முன்பு சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதும் தெரிந்தது. இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் வெளியான கட்டுரையை காண இங்கே கிளிக் செய்யுங்கள். இவை எல்லாம் இந்த நபர் இந்து சாமியார் ஆனந்த் வரூப் மகாராஜ் இல்லை என்பதை உறுதி செய்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் என்று பேசிய வட இந்திய சாமியார் ஆனந்த் ஸ்வரூப் மகராஜ் இலங்கையில் உல்லாசமாக இருந்த போது சிக்கினார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இலங்கையில் உல்லாசமாக இருந்த சுவாமி ஆனந்த் ஸ்வரூப் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False