
இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமான தளம் மிகக் கடுமையாக சேதமடைந்ததாகவும் அதனால்தான் பாகிஸ்தான் சரணடைந்தது என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
விமான நிலையத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் தலைமை ராணுவ விமானதளம் சரணடைந்த காரணம் தெரியுதா?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் காரணமாக பாகிஸ்தானின் விமான தளம் மிகக் கடுமையாக பதிக்கப்பட்டள்ள காட்சி என்று மேற்கண்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஏராளமான விமானங்கள் சிதைந்த நிலையில் இருப்பதை, இந்த வீடியோவில் காண முடிந்தது. இந்தியா நடத்திய தாக்குதல் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது இந்த வீடியோ 2025 ஏப்ரல் 1ம் தேதியே அதாவது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே யூடியூபில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதில், ஆர்.எஸ்.எப் போராளிகள் தாக்குதலுக்குப் பிறகு கார்டோம் விமானநிலையத்தின் நிலை (STATUS OF KHARTOUM AIRPORT AFTER IT WAS VANDALIZED BY RSF FIGHTERS) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விமான நிலையம் சூடானின் தலைநகரில் உள்ளது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் தொடர்ந்து தேடியபோது வேறு பல பதிவுகள் நமக்கு கிடைத்தன. அதில், “சூடானின் கார்டோம் விமானநிலையத்தில் சூடான் ராணுவத்திற்கும் ரேப்பிட் சப்போர்ட் ஃபோர்சஸ் அமைப்புக்கும் நிகழ்ந்த தாக்குதலில் மிகப்பெரிய அளவில் விமானங்கள் சேதமடைந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படைத் தளம் சீர்குலைந்து காணப்படும் காட்சி என்று பரவும் வீடியோ 2025 மார்ச் மாதம் இறுதியிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதை உறுதி செய்துள்ளோம். சூடானின் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் இது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இந்திய தாக்குதலில் சிதைந்து போன பாகிஸ்தான் விமானப்படை தளம் என்று பரவும் வீடியோ சூடானைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:இந்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் விமான தளம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
