
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த வன்னி அரசுக்கு மூளை பிதற்றல் நோய் இருப்பதாக தொல் திருமாவளவன் கூறினார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் புகைப்படங்களுடன் தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தம்பி வன்னியரசுக்கு மூளை பிதற்றல்? தான்தோன்றி தனமாக சமூகவலைதளங்களில் வன்னியரசு பதிவிடும் கருத்துக்களால் வி.சி.க விற்கு அவப்பெயர் ஏற்படுத்தி தருகிறார் என்பதை அறிந்தேன். தொடர்ந்து விசாரித்த போது அவருக்கு மூளை பிதற்றல் நோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சியுற்றேன்! – சிதம்பரம் எம்.பி. தொல்.திருமாவளவன் பேட்டி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை பரமேஸ்வரன் மாணிக்கம் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூன் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவர் வன்னி அரசு. அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாக நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டு வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. நியூஸ் கார்டு அளவில் வேறுபாடு இருந்தது. மேலும், அதன் டிசைன், தமிழ் ஃபாண்ட் என பல வேறுபாடுகளைக் காண முடிந்தது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன. ஆனாலும் பலரும் இதை ஃபேஸ்புக், ட்விட்டரில் பதிவிட்டு வரவே இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.
தந்தி டிவி இப்படி ஏதும் நியூஸ் கார்டு வெளியிட்டதா என அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். 2022 ஜூன் 27ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. தொல் திருமாவளவன் தொடர்பான நியூஸ் கார்டு எதுவும் கிடைக்கவில்லை. எனவே, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி, இது நீங்கள் வெளியிட்டதா, என்று கேட்டோம். அவர்களும் இது நாங்கள் வெளியிட்டது இல்லை, போலியானது என்று நம்மிடம் உறுதி செய்தனர்.

தொல் திருமாவளவன் இப்படி ஏதும் பேட்டி அளித்துள்ளாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ஆனால் நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கலில் திருமாவளவன் அவமரியாதை செய்யப்பட்டார் என்று தமிழின் முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. வன்னி அரசுக்கு மன நலப் பாதிப்பு என்று திருமாவளவன் உண்மையில் பேட்டி அளித்திருந்தால் அதை அந்த ஊடகம் மிகப்பெரிய செய்தியாகவே வெளியிட்டிருக்கும். இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானவை என்பதை உறுதி செய்தன. இதன் அடிப்படையில் வன்னி அரசு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என திருமாவளவன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வன்னியரசு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:வன்னி அரசுக்கு மூளை பிதற்றல் நோய் என திருமாவளவன் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
