
கயிறு கட்டி, அதன் மீது நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு சூழல் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு உள்ளதால் இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பள்ளிக்கூட மாணவர்கள் ஆற்றைக் கடக்க, இரண்டு மரங்கள் இடையே கயிறு கட்டி, அதன் மீது நடந்து செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “பாலம் கட்டாத ஆற்றை கடக்க கயிறு கட்டி அதில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்! அதிகம் பகிருங்கள் அதிகாரிகள் கண்களில் படும்வரை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Shaheer Sha என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 டிசம்பர் 7ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பள்ளிக் கூட மாணவர்கள் கயிறு மீது நடந்து ஆற்றைக் கடக்கும் படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. எப்போது எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடவில்லை. மொட்டையாக அதிகாரிகள் கண்களில் படும் வரை அதிகமாகப் பகிருங்கள் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புகைப்படம் தமிழகத்தில் எடுக்கப்பட்டது போல பலரும் கமெண்ட் செய்து, தமிழ்நாடு அரசை விமர்சித்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் இந்த போஸ்டை பலரும் பகிர்ந்தும் வருகின்றனர். எனவே, இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பல ஆண்டுகளாக இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது தெரிந்தது. ஆனால், எங்கு எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை. எனவே, வெவ்வேறு ரிசர்ஸ் இமேஜ் தேடலில் இந்த புகைப்படத்தைப் பதிவேற்றித் தேடினோம்.
yandex.com ரிவர்ஸ் இமேஜ் தேடலில் இந்த படத்தைப் பதிவேற்றித் தேடிய போது, இந்த புகைப்படத்துடன் தி இந்து, டெக்கான் கிரானிக்கிள் உள்ளிட்ட ஊடகங்களில் 2016ம் ஆண்டு செய்தி வெளியாகி இருப்பது தெரியவந்தது. அந்த செய்தியில், இந்த புகைப்படம் ஒடிஷா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். நவீன போக்குவரத்து வசதிகள் ஒடிஷா மக்களுக்கு இன்னும் கனவாகவே உள்ளது என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள், பொது மக்கள் அவதியுறுவதாக குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: thehindu.com I Archive 1 I deccanchronicle.com I Archive 2
இதன் மூலம் இந்த புகைப்படம் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது. சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்கள் இந்த புகைப்படம் ஒடிஷா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தால் குழப்பம் வந்திருக்காது. முழுமையான விவரத்தை குறிப்பிடாமல் பதிவிட்டதால் தமிழகத்தில்தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று நினைத்து பலரும் பகிர்ந்து வருவதைத் தவிர்த்திருக்கலாம்.
முடிவு:
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் மாணவர்கள் புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Missing Context
