
குஜராத் மாநிலத்தில் உள்ள மின் கம்பம் என்றும் உத்தரப்பிரதேச மாநில மின் கம்பம் என்றும் ஒரு படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மரக்கம்புகளால் அமைக்கப்பட்ட, மரக் கம்புகளால் முட்டுக்கொடுக்கப்பட்ட மின் கம்பம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த உலக தரம் வாய்ந்த மின்வாரியம் எந்த மாநிலமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர் #வடையின் பீத்தளிழ் வளர்ந்த மாநிலமா இருக்குமோ #ளே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை கவிகே மு.ரா.அலி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 25ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook
“உலகத் தரம் வாய்ந்த உத்திர பிரதேச மின்சார வாரியம்” என்று குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை Sala Hudeen என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 22ம் தேதி பதிவிட்டுள்ளார். இவர்களைப் போல பலரும் இந்த புகைப்படத்தை தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மின் கம்பம் என்று குறிப்பிட்டு பலரும் இந்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர். இது உண்மையா என்று அறிய முதலில் இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் பாகிஸ்தானைச் சார்ந்தது என்று தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: loktej.com I Archive
கடந்த 2021ம் ஆண்டு இந்த புகைப்படத்தை குஜராத் மாநிலத்தைச் சார்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஒருவர் “குஜராத் மாடல்” என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்ததாகத் தகவல் நமக்கு கிடைத்தது. ஆனால், இந்த புகைப்படம் பாகிஸ்தானைச் சார்ந்தது என்று குறிப்பிட்டு 2021 ஜூலை 21ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது.
மேலும், இந்த புகைப்படத்தை பாகிஸ்தானியர்களுக்கான ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று 2021ம் ஆண்டு வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், உலகமே அணு கதிர் மின்சாரம் என்று முன்னேறிக்கொண்டிருக்கும் போது பாகிஸ்தானில் பழமையான முறை இன்றும் பயனுள்ளதாக இருக்கிறது என்று நக்கல் செய்து குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் வேறு சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது பாகிஸ்தானின் dawn.com இதழ் இதே போன்று மரக்கிளையால் ஆன மின் கம்பங்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருப்பதாகக் கட்டுரை வெளியிட்டிருப்பது தெரிந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் குஜராத் அல்லது உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்தது இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
குஜராத் / உத்தரப்பிரதேசத்தில் உள்ள மின்சார கம்பத்தின் நிலை என்று பகிரப்படும் படம் பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:குஜராத், உத்தரப்பிரதேசத்தில் மரக்கிளை மின் கம்பம் என்று பகிரப்படும் பாகிஸ்தான் படம்!
Fact Check By: Chendur PandianResult: False
