
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய போது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்திய கிரிக்கெட் அணியினர் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை ஸ்டேடியத்தில் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்த பிறகு இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு தங்களுடைய எX வலைதள பக்கத்தில் பதிவிட்ட வீடியோ. பார்த்தவர் மனதில் நிற்கும் உணர்ச்சிமிக்க காட்சி… பன்றிஸ்தான் ஆதரவாளர்களான திராவிடியாஸ்களின் கவனத்திற்கு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2025 பிப்ரவரி 23ம் தேதி நடந்த லீக் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதை இந்தியாவே கொண்டாடிய போது அதிலும் மதத்தை, விஷமத்தை நுழைத்துப் பதிவிட்டுள்ளனர். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் மா துஜே சலாம் (தாய் மண்ணே வணக்கம்) என்று இந்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாடியதை இந்திய கிரிக்கெட் வாரியம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டதாகவும் அதைப் பார்த்து திராவிட ஆதரவாளர்களுக்கு அதைக் கண்டு மனம் வெந்தது போலவும் பதிவிட்டுள்ளனர்.
திராவிட கொள்கை அல்லது கட்சிக்கு ஆதரவானவர்கள் எல்லாம் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று எதன் அடிப்படையில் பதிவாளர் தெரிவித்துள்ளார் என்று தெரியவில்லை. அந்த விவகாரத்திற்குள் நாம் செல்லவில்லை. குறிப்பிட்ட அந்த நாளில் அப்படி ஒரு வீடியோவை பிசிசிஐ வெளியிட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம். முதலில் இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவிட்டு தேடினோம்.
அப்போது 2024ம் ஆண்டில் டி20 உலகக் கோப்பையை இந்தியா வெற்றி பெற்ற போது மும்பையில் நடந்த விழாவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக செய்திகள் நமக்கு கிடைத்தன. வந்தேமாதரம் என்று இந்தியில் குறிப்பிட்டு இந்த வீடியோவை பிசிசிஐ தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் 2024 ஜூலை 4ம் தேதி பதிவிட்டிருந்தது.
2025 பிப்ரவரியில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு இந்த வீடியோவை பிசிசிஐ மீண்டும் பதிவிட்டதா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். பிசிசிஐ எக்ஸ் தள பக்கத்தில் பிப்ரவரி 23, 2025 அன்று வெளியான பதிவுகள் அனைத்தையும் பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ இல்லை. 23ம் தேதி வெளியான பதிவுகள் தொடர்பாக நாம் ரெக்கார்ட் செய்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
அன்றைய தினத்தில் அதாவது பிப்ரவரி 23ம் தேதி கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஹர்திக் பாண்டியா தொடர்பாக வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற ஒரு காட்சி சில விநாடிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், வந்தே மாதரம் பாடல் பாடுவதை ஒலிக்கவிடவில்லை. மேலும், அந்த வீடியோ இந்தியாவின் வெற்றி தொடர்பானதாகவும் இல்லை.
இதன் மூலம் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியதைத் தொடர்ந்து பிசிசிஐ வந்தேமாதரம் பாடல் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டதாகப் பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது, விஷமத்தனமானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
2024 ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீடியோவை சாம்பியஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியதும் பிசிசிஐ வெளியிட்ட வீடியோ என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பாகிஸ்தானை வீழ்த்தியதும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீடியோ இதுவா?
Written By: Chendur PandianResult: False
