கடையநல்லூர் ரயில் நிலையத்தில் ஆங்கில எழுத்தை அழித்த தி.மு.க-வினர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

கடையநல்லூர் ரயில் நிலைய பெயர் பலகையில் இந்திக்கு பதில் ஆங்கில எழுத்தை அழித்த தி.மு.க-வினர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கடையநல்லூர் ரயில் நிலையத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் ஆங்கில எழுத்துக்களை மட்டும் அழித்தது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஹிந்தி மொழிய அழிச்சிட்டோம் என்ற தலைப்பில் உலக அளவில் கடையநல்லூரை டிரெண்ட் செய்த இணைய வாசிகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மற்றொரு பதிவில் தி.மு.க தொண்டர்கள் கூட்டமாக வந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பெயரை அழிப்பது போன்று வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “நேற்று கடையநல்லூர் ரயில்வே நிலையத்தில் ஹிந்தியை அழித்தே தீருவோம் என வெறித்தனமாக வந்த #தற்குறி_கொத்தடிமைகள்200 ரூபாய் கூலிக்காரர்கள் ஹிந்தி எது… இங்கிலீஷ் எது.. என தெரியாமல் இங்கிலீஷை தார் ஊத்தி அழித்ததால்.. சுற்றி வேடிக்கை பார்த்த மக்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே பள்ளிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து மறைமுகமாக இந்தித் திணிப்பு நடக்கிறது என்று கூறி தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள இந்தி பெயர் பலகைகளை எல்லாம் கருப்பு பெயிண்ட் பூசி அழித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி வார்த்தைகளையும் தி.மு.க-வினர் அழித்தனர். ஆனால், இந்திக்கு பதில் ஆங்கிலத்தை அழித்த தி.மு.க-வினர் என்று பலரும் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அப்படி ஆங்கில எழுத்தை முற்றிலுமாக அழித்ததாக எந்த வீடியோவும் இல்லை. ஆனால், இந்தியை விட்டுவிட்டு ஆங்கிலத்தை அழித்தது போன்ற படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இது தொடர்பாக வெளியான செய்திகளைப் பார்த்தோம். தி.மு.க நிர்வாகி ஒருவர் கடையநல்லூர் பெயர் பலகையில் உள்ள இந்தி வார்த்தையை அழிக்க முயற்சி செய்கிறார். வேஷ்டியை சரி செய்து பெயிண்ட் எடுத்து அழிக்க முயன்ற போது ஆங்கில எழுத்தான எல் (L) மீது பூசுகிறார். அருகிலிருந்தவர்கள் தவற்றைச் சுட்டிக்காட்டவே, அவரும் இந்தி எழுத்துக்களை அழிக்கிறார். முழுவதுமாக இந்தி எழுத்து மட்டுமே அழிக்கப்படுகிறது. 

தொடர்ந்து தேடிய போது தந்தி டிவி-யில் மட்டும் இந்திக்கு பதில் ஆங்கில எழுத்தை அழித்த திமுக-வினர் என்று தலைப்பு வைத்து செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதை பார்த்த போது, “கடையநல்லூரில் திமுக-வினர் இந்திக்குப் பதிலாக ஆங்கிலத்தை அழித்த காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரயில்நிலைய பெயர் பலகையிலிருந்த ஆங்கில எழுத்தை தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லதுரை கருப்பு மையினால் தவறுதலாக அழித்தார். 

அப்போது தொண்டர்கள் இந்தி எழுத்தை அழிக்க வேண்டும் என அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவர் இந்தி எழுத்துக்களை அழித்தார்” என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், ஆங்கில எழுத்து முழுவதுமாக அழிக்கப்பட்டது போன்று காட்சி இல்லை. எல் (L) மீது மை பூசிவிட்டு பின்னர் அவர் இந்தி எழுத்தை முற்றிலுமாக அழித்ததை அதே வீடியோவில் காண முடிந்தது.

அவர் தெரிந்து செய்தாரா, தெரியாமல் செய்தாரா, பதற்றத்தில் தவறாக அழித்தாரா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. அவர் ஆங்கில எழுத்தை அழித்தார் என்று கூறும் தகவல் மற்றும் புகைப்படம் தவறானது என்பதை மட்டும் உறுதி செய்துள்ளோம். கடையநல்லூர் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் ஆங்கில எழுத்து அழிக்கப்படவில்லை, ஆங்கில எழுத்து அழிக்கப்படுவதாக பரவும் புகைப்படம் தவறானது எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.

முடிவு:

கடையநல்லூர் ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்தை அழிப்பதற்கு பதில் ஆங்கில எழுத்தை அழித்த தி.மு.க-வினர் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title: கடையநல்லூர் ரயில் நிலையத்தில் ஆங்கில எழுத்தை அழித்த தி.மு.க-வினர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered