பெரியார் பற்றித் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

பெரியார் பற்றி சீமான் கூறிய கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அது பற்றி எனக்குத் தெரியாது, ஆய்வு செய்தால்தான் உண்மையா பொய்யா என்பது தெரியவரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு வீடியோ நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த வீடியோவை வைத்து நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டிருந்த நியூஸ் கார்டு மாதிரியான வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இதெல்லாம் புராணம் படிக்கனும். நான் அந்த அளவுக்கு படிச்சவன் இல்லை, இந்த மாதிரியான கதை எல்லாம் படிச்சி சொல்லனும்னா பெரிய ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வு செய்தால்தான் இது உண்மையா பொய்யா என்பது தெரியும். அதுக்கு நான் உட்பட்டவன் இல்லை” என்று கூறுகிறார். 

வீடியோவின் கீழே, “ஆய்வு பண்ணுனாதான் உண்மையா பொய்யா என்பது தெரியவரும். சீமான், பெரியார் பற்றி பேசிய சர்ச்சை கருத்து குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்” என்று இருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெரியார் பற்றி தவறான கருத்தை சீமான் தெரிவித்திருந்தார். அப்படி ஒரு விஷயத்தை பெரியார் பேசவில்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் பெரியார் பற்றி சீமான் பேசியது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, அந்த விவரம் பற்றி தனக்குத் தெரியாது என்று கூறியது போன்று வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோ கடந்த ஆண்டு ஆளுநர் திராவிடம் பற்றிப் பேசிய போது எடப்பாடி பழனிசாமி அளித்த பதில். ஆரியம், திராவிடம் பற்றித் தெரிந்துகொள்ளப் புராணம் எல்லாம் படிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அப்போது கூறியிருந்தார். அந்த செய்தி நன்கு நினைவில் இருப்பதால் அந்த வீடியோவை தேடினோம்.

யூடியூபில் திராவிடம், எடப்பாடி பழனிசாமி என்று டைப் செய்து தேடியதும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ கிடைத்தது. 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி இந்த பேட்டியை எடப்பாடி பழனிசாமி அளித்திருந்தார். “நான் படித்தவன் இல்லை. ஆரியம், திராவிடம் கேள்வி! நழுவிய எடப்பாடி” என்று தலைப்பிட்டு ஏபிபி நாடு இந்த பேட்டியை வெளியிட்டிருந்தது. 

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை 2023 அக்டோபரில் நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டிருந்தது தெரிந்தது. ஆனால் அதில், “ஆரியம், திராவிடம் இருக்கிறதா, இல்லையா என அறிஞர்கள்தான் கூற வேண்டும்; நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல. ஆளுநரின் கருத்து குறித்த செய்தியாளரின் கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்” என்று இருந்தது. இதை எடிட் செய்து, தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2023ம் ஆண்டு திராவிடம் பற்றி ஆளுநர் பேசியது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்ட வீடியோவை தற்போது சீமான் பெரியார் பற்றி தவறாக பேசியது தொடர்பாக கேட்டது போன்று மாற்றி தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:பெரியார் பற்றித் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False