ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி வங்கிக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ததா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி (write-off) செய்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிந்துகொள்ள ஆய்வு செய்தோம்.

பிரபல பாலிவுட் நடிகையும் ஐபிஎல் கிரிக்கெட் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தொடர்பாக சமீபத்தில் கேரள காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டது. அதில், “நடிகை ப்ரீத்தி ஜிந்தா தன்னுடைய சமூக ஊடக பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜக-வுக்கு கொடுத்து, வங்கிக் கடன் ரூ.18 கோடி தள்ளுபடி பெற்றார். அந்த வங்கி கடந்த வாரம் நிதி நெருக்கடியில் சிக்கியது. முதலீட்டாளர்கள் தற்போது தங்கள் பணத்திற்காக வீதிகளில் நிற்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தது.

Archive

இந்த தகவல் தவறானது என்று நடிகை ப்ரீத்தி ஜிந்தா மறுத்திருந்தார். காங்கிரஸ் வெளியிட்டிருந்த பதிவுக்கு அவர் அளித்திருந்த பதிலில், “இல்லை, எனது சமூக ஊடக கணக்குகளை நானே இயக்குகிறேன், போலி செய்திகளை வெளியிட்டத்காக உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன்! யாரும் எனக்காக எதையும் அல்லது எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. 

Archive

ஒரு அரசியல் கட்சி அல்லது அதன் பிரதிநிதி எனது பெயர் மற்றும் படங்களைப் பயன்படுத்தி தவறான வதந்திகள் மற்றும் போலிச் செய்திகளை ஊக்குவிப்பதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இங்கு ஒரு தகவலைப் பதிவு செய்ய விரும்புகிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கப்பட்டு முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டது. இந்த தகவல் எதிர்காலத்தில் தவறான புரிதல் ஏற்படாமல் இருக்கவும் மற்றவர்களுக்குத் தெளிவுபடுத்தவும் உதவும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

ஆனாலும், நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் தொடர்பாக தொடர்ந்து தேடிப் பார்த்தோம். அப்போது முப்பை மாநகர காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் கிடைத்தன. 

உண்மைப் பதிவைக் காண: abplive.com I Archive

அதில், “தற்போது நடந்து வரும் விசாரணையில் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் பெயர் இடம் பெறவில்லை. ப்ரீத்தி ஜிந்தா தொடர்பாக எங்களுக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளது. நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக நமக்கு எந்த செய்தியும் கிடைக்கவில்லை. மேலும் கடனை திருப்பிச் செலுத்திவிட்டதாக ப்ரீத்தி ஜிந்தா உறுதி செய்துள்ளார். இவை எல்லாம் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் வங்கிக் கடனை பாஜக அரசு தள்ளுபடி செய்தது என்று பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்கின்றன.

நியூ இந்தியா கேஆப்ரேட்டிவ் வங்கி முறைகேடு:

நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் வங்கியில் நடந்த முறைகேடு என்ன என்று அறிய அது தொடர்பாக வெளியான செய்திகளைப் பார்த்தோம். 2025 பிப்ரவரி 12ம் அந்த வங்கியில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது வங்கிக் கிளை ஒன்றின் பெட்டகத்தில் கணக்கிலிருந்த ரூ.112 கோடியும் மற்றொரு கிளையில் ரூ.10 கோடி பணம் காணாமல் போயிருப்பதைக் கண்டறிந்தனர். பணத்தை 2019ம் ஆண்டிலிருந்து 2025ம் ஆண்டு வரையிலான காலத்தில் திருடியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் வங்கியின் முன்னாள் பொது மேலாளரான ஹிதேஷ் மேத்தா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த இரண்டு கிளைகளையும் ஹிதேஷ் மேதா நிர்வகித்து வந்துள்ளார். பணத்தை எடுத்து தர்மேஷ் பவுன் என்பவரிடம் ஒப்படைத்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து தர்மேஷ் பவுனும் கைது செய்யப்பட்டார். லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் வருவது போன்று வங்கியில் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கி விதிகளுக்கு மாறாக வேறு நிறுவனங்களுக்கு கடனாக கொடுத்து ரகசியமாக லாபம் சம்பாதித்திருப்பது தெரிகிறது. ஆனால் ரிசர்வ் வங்கி நடத்திய திடீர் ஆய்வில் இது வெளிப்பட்டுள்ளது. வங்கிக் கடன் ரைட் ஆஃப் செய்யப்பட்டதால் நிதி நெருக்கடி ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

நியூ இந்தியா கேஆப்ரேட்டிவ் வங்கியின் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வரும் சூழலில் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால்தான் வங்கியில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது போன்று தவறான தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி வங்கிக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ததா?

Written By: Chendur Pandian  

Result: Insight