
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த ஓராண்டுக்குள்ளாக திடீரென்று மசூதி ஒன்று கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தெலுங்கில் ஒருவர் பேசி வெளியிட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர், “மஸ்ஜித் இன் அருணாச்சலம் டெம்பிள். இது அருணாச்சலம் கோவில். எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, திடீரென்று மசூதி வந்துள்ளது, கடந்த ஓராண்டில்” என்று குறிப்பிடுகிறார். நிலைத் தகவலில், “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான கிரிவல பாதையில் புதிதாக முளைத்துள்ள “தர்கா” இப்ப தர்கா இன்னும் கொஞ்ச நாள் போனால் மொத்த மலையும் வக்ஃப் போர்டுக்கு சொந்தம்னு பிரியாணியோட வருவாங்க.. சம்பந்தப்பட்டவங்க இப்பவே இதை கொஞ்சம் கவனித்தால் பரவாயில்லை….” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் திடீரென்று தர்கா தோன்றியதாகவும்… விரைவில் திருவண்ணாமலை மலையே வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது என்று கூறுவார்கள் என்றும் இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. திடீரென்று தர்கா தோன்றியதா என்று அறிய ஆய்வு செய்தோம்.
தர்கா என்பது இஸ்லாமின் சூஃபி துறவிகளின் கல்லறைகள் மிது கட்டப்படும் கட்டிடம் ஆகும். அப்படி என்றால் திருவண்ணாமலையில் கடந்த ஓராண்டில் திடீரென்று அடக்கம் செய்து, கட்டிடம் கட்டியிருக்க முடியாது. எனவே, இந்த தர்கா தொடர்பாக ஆய்வு செய்தோம். முதலில் திருவண்ணாமலையில் இந்த தர்கா எங்கு உள்ளது என்று தேடிப் பார்த்தோம்.
உண்மைப் பதிவைக் காண: google.com I Archive
கூகுள் மேப்பில் அந்த தர்கா இருக்கும் இடத்தை கண்டுபிடித்தோம். அப்போது திருவண்ணாமலை கோவில் தேரடி வீதியில் மசூதி இருப்பது தெரிந்தது. 2022ம் ஆண்டு எடுக்கப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் தர்கா கட்டிடம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், பெயர்ப் பலகை இல்லை. ஆனால், 2024 ஜனவரியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பெயர் பலகை இருப்பதைக் காண முடிந்தது.
உண்மைப் பதிவைக் காண: google.com I Archive
கூகுளில் திருவண்ணாமலை தேடி சைதானி பீபி தர்கா என்று டைப் செய்து தேடினோம். அப்போது அந்த தர்கா தொடர்பாக பொது அறிவிப்பு விளம்பரம் ஒன்று வெளியாகி இருந்ததை காண முடிந்தது. அதில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து அந்த தர்கா அங்கு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் ஓராண்டில் திடீரென்று முறைத்த தர்கா என்று பரவும் தகவல் தவறானது என்பது தெளிவானது.
இந்த மசூதி தொடர்பாக தொடர்ந்து தேடிய போது, தமிழ்நாடு அரசு ஃபேக்ட் செக் வெளியிட்டிருந்த பதிவு நமக்குக் கிடைத்தது. அதில், “தர்கா அமைந்துள்ள இடமானது திருக்கோவிலுக்குத் தொடர்புடையது அல்ல. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தர்கா இருப்பதாக திருவண்ணாமலை நகர நில அளவை பதிவேடு தெரிவிக்கிறது. நகரக் கணக்கெடுப்பு பதிவேட்டில் குறிப்பு கலத்தில் மசூதி கட்டிடம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சமூக ஊடகங்களில் திருக்கோயில் இடத்தில் தர்கா என்று பரவும் தகவல் தவறானது என்று அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அந்த வீடியோவில் திருவண்ணாமலை நகர நில அளவை பதிவேட்டினையும் காட்டியிருந்தனர். இதன் மூலம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திடீரென்று முளைத்த தர்கா என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
திருவண்ணாமலையில் ஓராண்டில் திடீரென்று முளைத்த தர்கா என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திடீரென்று தோன்றிய தர்கா என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Misleading
