தவெக காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

தவெக காணாமல் போய்விடும் என்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தவெக காணாமல் போய்விடும். நேற்று முளைத்த காளான் தவெக கட்சி, அதிமுக ஆலமரம். அதனால அதிமுகவிற்கு எந்த சேதாரமோ பாதிப்போ கிடையாது. அதிமுக தனிச்சே ஆட்சி அமைக்கும். எங்களோடு சேர்ந்தால் அது அந்தக்கட்சிக்கு நல்லது, இல்லைனா தவெக அடுத்த தேர்தலோட காணாம போய்விடும் – அதிமுக ஜெயக்குமார் பதிலடி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், “ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்திருப்பாங்க போல … சாபம் விடுறாரு..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அதிமுக-வுடன் கூட்டணி அமைக்காவிட்டால் தமிழக வெற்றிக் கழகம் காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பலரும் நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். இந்த நியூஸ் கார்டில் உள்ள வாக்கியங்கள் புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல் இல்லை. பேச்சு வழக்கில் உள்ளது. 

“அதனால்” என்று குறிப்பிடுவதற்குப் பதில் “அதனால” என்றும் “தனித்தே” என்பதற்குப் பதில் “தனிச்சே” என்றும் “இல்லை என்றால்” என்பதற்கு பதில் “இல்லைனா” என்றும் “தேர்தலோடு” என்ற வார்த்தை “தேர்தலோட” என்றும் பேச்சு வழக்கில் உள்ளது. பொதுவாக எந்த ஊடகமும் இவ்வாறு பேச்சு வழக்கில் நியூஸ் கார்டு வெளியிடுவது இல்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு புதிய தலைமுறை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை என்பதைத் தெளிவுபடுத்தின.

இருப்பினும் இதை உறுதி செய்துகொள்ள முதலில் புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு இல்லை. எனவே, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை அனுப்பினோம். 

உண்மைப் பதிவைக் காண: Facebook 

அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரையும் தொடர்புகொண்டு கேட்டோம். இது போலியான நியூஸ் கார்டு, இது என்னுடைய கருத்து இல்லை என்று அவர் நம்மிடம் தெரிவித்தார். அதற்குள்ளாக புதிய தலைமுறையில் இருந்தும், ‘இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை’ என்றனர்.

மேலும், சிறிது நேரத்தில் இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை, இது போலியானது என்று குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றையும் புதிய தலைமுறை வெளியிட்டது. இதன் மூலம் தவெக காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் தகவல் மற்றும் நியூஸ் கார்டு தவறானது, போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அதிமுக-வுடன் கூட்டணி சேராவிட்டால் தவெக காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:தவெக காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரா?

Written By: Chendur Pandian 

Result: False