
ஹரித்துவார் செல்வதாகப் பேட்டி அளித்துவிட்டுச் சென்ற செங்கோட்டையன் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க-வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் சந்தித்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மன நிம்மதிக்காக ஹரித்துவாரில் மாமியை சந்தித்த செங்கொட்டையர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அ.தி.மு.க-வில் பிரிந்து இருக்கும் தலைவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காலக்கெடு விதித்திருந்தார். இதையடுத்து செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டினார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்வதாக கோவை விமானநிலையத்தில் செங்கோட்டையன் பேட்டி அளித்துவிட்டு சென்றார்.
ஆனால் டெல்லியில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியானது. ஆனால், இது தொடர்பான உறுதியான செய்தி ஏதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்ததாக ஒரு பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படம் பல ஆண்டுகளாக செய்தி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. அதே நேரத்தில் செங்கோட்டையன் டெல்லியில் நிர்மலா சீதாராமனை சமீபத்தில் சந்தித்ததாக எந்த செய்தியும் இல்லை. எனவே, இந்த புகைப்படம் சமீபத்திய படமாக இருக்காது என்பதால் இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2017ம் ஆண்டில் இந்த புகைப்படத்தை அப்போது வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தது தெரியவந்தது. மத்திய வர்த்தகத்துறை அமைச்சரின் எக்ஸ் தள பக்கத்தில் இந்த புகைப்படம் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதில், “தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2017ம் ஆண்டு வெளியான புகைப்படத்தை 2025ம் ஆண்டு அ.தி.மு.க-வில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட சூழலில், சந்திப்பு இப்போது நடந்தது போன்று தவறாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.
இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2017ம் ஆண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்த புகைப்படத்தை 2025ல் தற்போது சந்தித்தது போன்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ஹரித்துவார் செல்வதாகக் கூறிவிட்டு நிர்மலா சீதாராமனை சந்தித்தாரா செங்கோட்டையன்?
Fact Check By: Chendur PandianResult: False
